புதுவையில் ஆட்சியை இழந்த ஆளும் காங். அரசு.. நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா
புதுவை: புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்திரராஜனிடம் வழங்கினர்.
Recommended Video
புதுவையில் என் . ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுவையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது.
அது போல் என் ஆர் காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு நியமன எம்எல்ஏக்கள் தவிர்த்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இல்லை. 30 தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
புதுவை சட்டசபையில் 3 பேர் நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் பாஜகவினர். இதனால் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக இருந்து வந்தது. இதில் 2019 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவின் பதவி பறிபோனது.
இதையடுத்து காங்கிரஸ்- திமுகவின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இதையடுத்து அண்மையில் அமைச்சர் நமச்சிவாயம், மற்றொரு எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துவிட்டனர்.
இதையடுத்து நாராயணசாமியின் அரசுக்கான ஆதரவு 16 ஆக குறைந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவும் பதவி விலகியதை அடுத்து காங்கிரஸின் பலம் 15 ஆக இருந்தது.
மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் நேற்றைய தினம் பதவி விலகியதால் தற்போதைய சூழலில் ஆளும் காங்கிரஸ்- திமுகவின் பலம் சட்டசபையில் 13 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி.. சட்டசபையில் ஆளும்-எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காரசார வாதம்
சபாநாயகரை தவிர்த்து சட்டசபையில் காங்கிரஸின் பலம் 12ஆகவும் எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்சி பறி கொடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறினர். துணை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசையை சந்தித்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்வதாக கடிதத்தை வழங்கினார்கள்.