"புதுவையின் செல்ல மகள்!" மயங்கி உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி! சிலை வைத்த பக்தர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் யானை லட்சுமி உயிரிழந்த சில நாட்களே ஆன நிலையில், பக்தர்கள் யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு இணையாக இங்கிருந்த யானை லட்சுமியும் பிரபலமானது. காலில் கொலுசுடன் அந்த யானை சுற்றி வரும் அழகே தனி.
கடந்த 1995ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக இந்த யானையை வழங்கி இருந்தார். அதன் பின் புதுவை மக்களின் செல்லப்பிள்ளையாகவே இது வளர்ந்து வந்தது.
19 வயது பெண் கொடூர பலாத்கார கொலை! வேட்டைமிருகங்கள் என கண்டித்த ஐகோர்ட்! விடுதலை செய்த உச்சநீதிமன்றம்
மயங்கி விழுந்தது
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அன்பாகவே இது பழகும். ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வரும் பல நூறு பக்தர்கள் இந்த யானை ஆசீர்வாதம் செய்யும். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலை இந்த யானை திடீரென உயிரிழந்தது. சுமார் 27 வயதான இந்த லட்சுமி யானை இரு நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல வாக்கிங் போனது. யானைப் பாகன் லட்சுமி யானையை வழக்கம் போல அழைத்துச் சென்றார். கல்வே காலேஜ் அருகே யானை லட்சு சென்று கொண்டிருந்த போது, சில நொடிகள் நின்ற அந்த யானை திடீரென மயங்கி விழுந்தது.
உயிரிழப்பு
யானையைக் காப்பாற்றப் பாகனும் கால்நடை மருத்துவர்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் யானையை அவர்களால் உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. யானை லட்சுமி தனது 27 வயதில் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, யானை நல்லடக்கம் செய்யப்பட்டது. யானை லட்சுமி திடீரென உயிரிழந்துள்ளது கோயிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி
கோயில் வாசலில் கம்பீரமாக நின்று கொண்டு வரும் பக்தர்களை ஆசீர்வாதம் செய்யும் யானை லட்சுமி அங்கு இல்லாமல் இருப்பது பக்தர்களுக்கு வேதனையைத் தருகிறது. மணக்குள விநாயகர் கோயிலில் யானை இருக்கும் இடம் வெறிச்சோடி இருக்கிறது. எப்போதும் கோயிலுக்கு வருபவர்களுக்கு யானை இருக்கும் இடத்தை பார்த்து வேதனை அடைகிறார்கள். இதற்கிடையே பக்தர்கள் நேற்றைய தினம் 2ஆவது நாளாக லட்சுமி யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்களைத் தூவி, விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
சிலை
இந்நிலையில் கோயில் யானை லட்சுமி மயக்கமடைந்து உயிரிழந்த காமாட்சி அம்மன் கோயில் வீதியில் பக்தர்கள் ஒன்றிணைந்து 3 அடி பீடத்தில் 2 அடிக்கு யானை சிலையை நிறுவியுள்ளனர். புதுவையின் செல்ல மகள் எனப் பெயரிடப்பட்டுள்ள சிலையை நிறுவிய பக்தர்கள், அதற்குச் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர்.. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுக் கலந்து கொண்டு யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோரிக்கை
யானை உயிரிழந்த இடத்தில் விநாயகர் சிலை வைக்கப் புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில், பக்தர்கள் ஒன்றாக இணைந்து யானையின் நினைவாகச் சிலை அமைத்துள்ளனர் மேலும் யானை லட்சுமியின் நினைவாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிலையை நிரந்தரமாக வைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இதேபோல் மணக்குள விநாயகர் கோயிலிலும் சிலை அமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.