கட்சி கட்டுப்பாட்டை மீறிய காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் அதிரடி நீக்கம் - தலைமை நடவடிக்கை
காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனைத் தற்போது காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை மீறி நடந்துகொண்டதால் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி: பெரும்பான்மையை இழந்ததால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு இன்று கவிழ்ந்தது. ஆட்சி கவிழ காரணமாக இருந்ததாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனைத் தற்போது காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை மீறி நடந்துகொண்டதால் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி முதல்வராக இருந்த நாராயணசாமிக்கு கடந்த ஒரு வாரகாலமாகவே தலைவலிதான். எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். துணை நிலை ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பதவியேற்ற நாளிலேயே நாராயணசாமி தனது பெரும்பான்மையை 22ஆம் தேதி சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருந்தனர். அப்போது கூட காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று தைரியமாக சொன்னார் நாராயணசாமி.
இந்த சூழ்நிலையில்தான் சபாநாயகர் சிவக்கொழுந்துவை ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.
லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக உறுப்பினர் வெங்கடேசனும் பதவியை ராஜினாமா செய்தார். 12 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் நாராயணசாமி.
சட்டசபையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பேசினார் நாராயணசாமி. அப்போது எதிர்கட்சியினருக்கும் நாராயணசாமிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. சில நிமிடங்களில் அவையை விட்டு வெளியேறினார் நாராயணசாமி. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
ஆட்சி கவிழ முக்கிய காரணமாக அமைந்தது இந்த இரண்டு எம்எல்ஏக்களின் ராஜினாமாதான். இதனையடுத்து திமுக எம்எல்ஏ வெங்கடேசன். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அவரை தற்காலிகமாக நீக்குவதாகச் சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனைத் தற்போது காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை மீறி நடந்துகொண்டதால் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலைமை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications