புத்துயிர் பெறும் முதல்வர் ரங்கசாமியின் கனவுத்திட்டம்.. ரூ 220 கோடி செலவில் அமையும் புதிய சட்டசபை
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூபாய் 220 கோடி செலவில் தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்படும் எனச் சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடற்கரைச் சாலை பாரதி பூங்கா அருகில் சட்டசபை இயங்கி வருகிறது. பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் சட்டசபை தற்போது இயங்கி வருகிறது.

புதுச்சேரி சட்டசபைக்கு புதிய கட்டிடம் கட்டுவது என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். கடந்த 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோதே இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை
கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதலில் புதிய சட்டசபையைக் கட்டும் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றே அறிவித்திருந்தது. இருப்பினும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது புதுவையில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள என் ஆர் காங்கிரஸ் சட்டசபைக்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இது குறித்து புதுவை சபாநாயகர் செல்வம் மக்களவை சாபாநாயகர் ஓம் பிர்லாவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை செயலர் முனிசாமி, சட்டசபை தலைவரின் தனிச்செயலர் தயாளன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் இந்த புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்படும் என்றார். 220 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள இந்த சட்டசபை கட்டிடத்தை 16 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications