தமிழகத்தை சேர்ந்தோருக்கு அனுமதியில்லை.. விஜயின் புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்துக்கு நிபந்தனை
புதுச்சேரி: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தனது பிரசாரத்தை நிறுத்தி வைத்தார். 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் டிசம்பர் 9 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் நடிகர் விஜயின் தவெக கட்சி போட்டியிட உள்ளது. இதற்கான பிரசாரத்தை தமிழகத்தில் விஜய் தொடங்கினார். ஆனால் செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூரில் நடந்த பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர்.

இதையடுத்து விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். பனையூரில் உள்ள அலுவலகத்தில் மட்டும் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் உள்ளரங்கு கூட்டத்தை நடத்தி கொண்டார். இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு பிறகு விஜயின் தவெக மீண்டும் பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.
இந்த முறை விஜய் புதுச்சேரியை குறிவைத்துள்ளார். டிசம்பர் 9 ம்தேதியான நாளை மறுநாள் புதுச்சேரியில் விஜய் பரப்புரை பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதற்கு புதுச்சேரி போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். புதுச்சேரி உப்பளத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இந்த பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இந்த கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛புதுச்சேரியின் உப்பளம் பொருட்காட்சி மைதானத்தில் (புதிய துறைமுகம்) தவெக கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு டிசம்பர் 9 ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* தவெக கட்சியினர் கேட்டு கொண்டதன்படி பொதுக்கூட்டத்தில் மொத்தம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.
* தவெக சார்பில் வழங்கப்பட்ட க்யூஆர் கோட் உடன் கூடிய பாஸ் வைத்திருப்போர் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும்.
* க்யூஆர் கோட் உடன் கூடிய பாஸ் இன்றி வருவோருக்கு அனுமதி கிடையாது. பாஸ் இல்லாதவர்கள் பரப்புரை பொதுக்கூட்டத்துக்கு வர வேண்டாம்.
* குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.
* இந்த பரப்புரை பொதுக்கூட்டம் என்பது புதுச்சேரி மக்களுக்கானது. இதனால் 5,000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தவெக தெரிவித்துள்ளது.
* தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை. இதனால் சிரமங்களை தவிர்க்க அவர்கள் பரப்புரை பொதுக்கூட்டத்துக்கு வர வேண்டாம்.
* வாகனங்களை பாண்டி மெரினா பார்க்கிங், ஸ்டேடியம் பின்புறம் உள்ள பார்க்கிங் மற்றும் பழைய துறைமுக பகுதிகளில் நிறுத்த வேண்டும்.
* நிகழ்ச்சிக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு, தீயணைப்பு என்ஜின், அவசர வழிப்பாதைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications