அமெரிக்கா அறிக்கை.. இந்தியாவுக்கே தலைகுனிவு! ரங்கசாமி முதுகில் குத்தும் தமிழிசை - நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரிபோல் தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பொதுமக்களை சந்திக்க தமிழிசைக்கு திராணி இருக்கிறதா என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சருடன் இணக்கமாக இருப்பது போல் காட்டிவிட்டு தமிழிசை முதுகில் குத்துகிறார் என அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நாரயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழகத்தில் இரண்டாவது முறையாக திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யபட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.
கர்நாடக யாத்திரையில் ராகுல்.. நடுவே வந்த துக்க செய்தி - முலாயம் படத்துக்கு மலர் தூவி மரியாதை
அமெரிக்கா அறிக்கை
2022 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா இந்தியா குறித்து 4 முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும். அல்லது இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் அறிக்கை.
தமிழிசை சவுந்திரராஜன்
மதத்தின் பெயரால் மக்களை திசை திருப்பி RSS மூலம் அரசியல் செய்கின்றனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுகிறது. மேலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மக்களிடம் குறை கேட்கிறார்? புதுச்சேரியைபோல் தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பொதுமக்களை சந்திக்க தமிழிசைக்கு துணிச்சல் இருக்கிறதா?
இரட்டை ஆட்சி
அங்கு சந்திரசேகர் ராவ் கட்சியினர் தமிழிசையை விரட்டி அடிக்கின்றனர். அவரை யாரும் மதிப்பதில்லை. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் புதுச்சேரியில் முதலமைச்சருடன் இணக்கமாக இருப்பது போல் காட்டிவிட்டு அவரை முதுகில் குத்துகிறார். ஆளுநர் இரட்டை ஆட்சி நடத்துகிறார்.
ரங்கசாமி
இதைபற்றி முதலமைச்சர் ரங்கசாமிக்கு எந்த கவலையும் இல்லை. அவருக்கு தேவை முதலமைச்சர் நாற்காலி தான். அதிகாரம் பறிபோனாலும் கவலை இல்லை. இதுபோன்ற ஆட்சியை ரங்கசாமி நடத்த வேண்டுமா? உண்மையிலேயே ரங்கசாமிக்கு பதவி ஆசை இல்லையென்றால் ஏன் அந்த பதவியில் இருக்கிறார்.
ஜனநாயக விரோதம்
ஆளுநர் மக்களை சந்திக்கிறார் என்று தெரிந்தும் கூட்டணியை விட்டு வெளியேறி இருக்க வேண்டாமா? துணைநிலை ஆளுநர் உடனடியாக மக்களை சந்திப்பதை நிறுத்த வேண்டும். இது ஜனநாயக விரோதமும் நீதிமன்ற அவமதிப்புமாகும். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்." எனக் கூறினார்.