புதுச்சேரியில் இந்து முன்னணி முழு அடைப்பு.. மீறிய தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடி கல்வீசி உடைப்பு
புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக கூறி அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 2 தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

ஆ.ராசா பேச்சு
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

சர்ச்சை வீடியோ
விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

போலீசில் புகார்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. காவல்நிலையத்திலும் ஆ.ராசா மீது புகாரளிக்கப்பட்டு இருக்கிறது.

புதுச்சேரியில் முழு அடைப்பு
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதன் காரணமாக புதுச்சேரியில் கடைகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. சரக்கு மற்றும் பொது போக்குவரத்து இயங்கவில்லை. இதன் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பேருந்துகள் மீது தாக்குதல்
முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழ்நாடு அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் 2 தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகள் பேருந்து மீது தாக்குதல்
இந்த முழு அடைப்பின் போது தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்தும் தாக்கப்பட்டது. இதனால் மாணவிகள் சாலையில் தவித்தபடி நின்றிருந்தனர். இச்சம்பவத்துக்கு திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications