புதுவைக்குப் போலாமா.. போட் ரைடு பண்ணலாமா.. சூடு பிடிக்கும் சுண்ணாம்பாறு படகு சவாரி!
புதுச்சேரி: புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு சவாரியும், பாரடைஸ் பீச்சும் கோடை விடுமுறைக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் தங்களது குடும்பத்தோடு வந்து சுண்ணாம்பாற்றில் படகு சவாரி செய்து, அங்குள்ள பாரடைஸ் பீச்சில் ஆனந்த குளியல்போட்டு கோடை விடுமுறையை கொண்டாடிவிட்டு செல்கின்றனர்.
தென் மாநிலத்தவர் பெரும்பாலோனோர் கோடை விடுமுறைக்கு வெயிலுக்கு இதமாக ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, வால்பாறை, கூர்க் உள்ளிட்ட மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்... ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்
புதுச்சேரி படகு சவாரி
இதில் ஒருசிலருக்கு கடல் மற்றும் ஆறுகளில் படகு சவாரி செய்து ஆனந்த குளியல் போடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இப்படி இயற்கை அழகை ரசித்தபடி ஆற்றில் படகு சவாரி செய்து கடலில் குளித்து இந்த கோடை விடுமுறையை கொண்டாட சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது புதுச்சேரியில் உள்ள சுண்ணாம்பாறு படகு சவாரியும், பாரடைஸ் பீச்சும்.
சூடு பிடிக்கும் சுற்றுலா
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ராக் பீச், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், ஆரோவில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், இந்த கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுண்ணாம்பாறு படகு சவாரி சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. புதுச்சேரி நகரிலிருந்து 5 கி.மீ பயணம் செய்தால் சுண்ணாம்பாறு படகு இல்லத்தை சென்றடையலாம்.
படகு மூலம்
இங்கிருந்து படகு மூலம் இயற்கை அழகை ரசித்தபடியே அரை மணி நேரம் பயணம் செய்தால் மணல் சூழ்ந்த பாரடைஸ் பீச் வந்து சேரும். சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் பாரடைஸ் பீச் வந்து சேர்ந்தவுடன் பல்வேறு நீர் சாகச விளையாட்டுகள் மற்றும் பீச் வாலிபால், குதிரை சவாரி, செயற்கை மழை குளியல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
உணவுகள் இளநீர்
இவற்றை முடித்தவுடன் கடலில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை அழகை ரசித்தபடியே கடற் மணல் பரப்பில் அமைந்துள்ள கடல்சார்ந்த உணவுபொருட்கள், இளநீர் மற்றும் மதுவகைகளும் கிடைகின்றன. மேலும் சுற்றுலாத்துறை சார்பில் இங்கு 10 க்கும் மேற்பட்ட சிறு குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து கடல் அழகை ரசித்தபடி ஓய்வெடுக்கலாம்.
பாரடைஸ் பீச் விசிட்
பாரடைஸ் பீச்சிற்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை சுண்ணம்பாற்றில் இருந்து படகு மூலம் கொண்டு சென்று விட்டுவிடுவார்கள். ஒரு சில மணி நேரங்கள் அவர்கள் அங்கு பொழுதை கழிக்கலாம். இப்படியாக அடிக்கடி அப்பகுதிக்கு படகுகள் சென்று வருகின்றன. திரும்பி வரும் படகில் பயணிகள் ஏறி கரைக்கு வந்து சேரலாம். பாதுகாப்பு கருதி இப்பகுதிக்கு 4 மணிக்கு மேல் படகு சவாரி இல்லை. ஆனால் 6 மணி வரை குறுகிய தூர பயணத்துக்குப் படகு சவாரி இருக்கிறது பேரடைஸ் பீச் பயணத்திற்கு 300 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.