சூப்பர்.. இருளர் இன மாணவிக்கு இரவில் கிடைத்த பர்த்டே சர்ப்பிரைஸ்.. புதுச்சேரியில் நெகிழ்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக பிறந்தநாள் கொண்டாட முடியாத கவலையில் இருந்த இருளரின மாணவிக்கு, கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் கேக் தயார் செய்து, பிறந்தநாள் கொண்டாடியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
புதுச்சேரி அருகே பாகூர் சித்தேரி செல்லும் வழியில் அமைந்துள்ள இருளர் இன குடியிருப்பைச் சேர்ந்த விஜயன் - கற்பூரவள்ளி தம்பதியின் மகள் நிவேதா. அங்குள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், வருடந்தோறும் தங்களுடைய செல்ல மகள் நிவேதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர்.
ஆண்டுதோறும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய நிவேதா, தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்தால், பிறந்த நாளை கொண்டாட முடியாமல் கவலை அடைந்துள்ளார்.
கவலையில் மூழ்கிய மாணவி
இதனைக் கவனித்த, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் உணவினை வழங்கி வரும் நீர்நிலை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தன்னால் பிறந்தநாள் கொண்டாட முடியாததை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னார்வலர்கள் பேக்கரி நடத்தி வரும் தனக்கு தெரிந்த நண்பரை தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்து வீட்டில் கேக் தயாரித்துள்ளனர்.
மகிழ்ச்சியில் மூழ்கிய சிறுமி
பின்னர் கேக்குடன் மாணவியின் வீட்டுக்கு இரவு வந்துள்ளனர். இதையடுத்து வீட்டின் முன்பு, அப்பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கேக்வெட்டி மாணவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ஹேப்பி பர்த்டே பாடலைப் பாடியும் சிறுமியை மகிழ்வித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அருமையான சேவை
இதுகுறித்து நீர்நிலை பாதுகாப்பு குழுவின் தலைவர் தன்னார்வலர் அசோக்குமார் கூறுகையில், புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் உணவினை கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு எங்கள் குழுவின் மூலம் மூன்று வேளையும் வழங்கி வருகிறோம். அதுபோல் பாகூர் சித்தேரி செல்லும் வழியில் அமைந்துள்ள இருளரின குடியிருப்பு மக்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து உணவு கொடுத்து வருகிறோம்.
கண்ணீரைத் துடைத்தோம்
வழக்கம்போல் ஒருநாள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த மாணவி நிவேதா அழுதுகொண்டு கவலையாக இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, பிறந்தநாள் கொண்டாட முடியாததால் சோகத்துடன் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பேக்கரி நடத்தி வரும் நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கூறி வீட்டிலேயே கேக் தயார் செய்து எடுத்து வந்தார்.
மகிழ்ச்சியில் மூழ்கிய நிவேதா
அதன் பின்னர் எங்கள் குழுவின் தன்னார்வலர்கள், பாகூர் துணை வட்டாட்சியர் செந்தில் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து சமூக இடைவெளியுடன் மாணவிக்கு பிறந்தநாள் கொண்டாடினோம். இதனால் அந்த மாணவி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எங்களுக்கும் மாணவியின் ஆசையை நிறைவேற்றியது மனநிறைவாக இருந்தது என அசோக்குமார் தெரிவித்தார்.