புதுச்சேரியில் மே 17ம் தேதிவரை மதுக்கடைகள் திறப்பு இல்லை.. முதல்வர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி: மே 17ஆம் தேதி ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகளை திறக்க வேண்டாமென முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மதுக்கடைகளை திறப்பது, பெட்ரோல் மற்றும் மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிப்பது, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் நேரத்தை மாற்றியமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மே 17 பிறகுதான் மதுக்கடைகள் ஓபன்
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் மதுபானக்கடைகள் திறந்தால் அருகில் உள்ள தமிழகப் பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த குடிகாரர்கள் புதுச்சேரிக்கு வந்து மது அருந்த வாய்ப்புள்ளதால், புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளது. எனவே மே 17 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் மதுக்கடைகளை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்
இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இந்த கொரோனா தொற்று நோயுடன் மக்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளது சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இந்த கொரோனா தொற்று நோய் நம் நாட்டைவிட்டு வெகுவிரைவில் போகாது என்று அதில் தெரிகிறது. ஆகவே, கொரோனா தொற்று நோயோடு இருந்து அதனை வெல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் எடுக்க வேண்டும். மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது. கொரோனா தொற்று ஒழியும் வரை திருமணம், ஈமச்சடங்கு, திருவிழாவுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

அவுரங்காபனபாத் சம்பவத்திற்கு விசாரணை வேண்டும்
அவுரங்காபத்தில் நடந்த சம்பவம் நம்முடைய மனதை உறுக்கியுள்ளது. மிகப்பெரிய அளவில் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் உடனடியாக விசாரணை வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு கணிசமான தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது. ஆகவே, ஏழைகளை எல்லாம் ஒரு மாநிலத்தில் இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு இருமாநிலமும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

சம்பளம் போட முடியல
பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில், சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என மத்திய அரசு நிர்ணயிக்கக் கூடாது. அதனை மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும். 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிய போகிறது. தற்போது மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கு வருவாய் இல்லை. கடந்த 45 நாட்களாக எல்லா மாநிலமும் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியவில்லை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன. அதற்கு மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய அரசு இந்த நேரத்தில் மாநில அரசுகளுக்கு கணிசமான நிதியை கொடுத்து, மாநில அரசுகள் பொருளாதாரத்தில் மேம்பட உதவ வேண்டும்.

நிதி வழங்க வேண்டும்
மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுபடி நாம் நடந்து கொண்டோம். அதற்காக கடைகள், தொழிற்சாலைகளை மூடினோம். அதேபோல், மாநிலங்களுக்கு உதவ வேண்டிய கடமை, பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசிடம் நிதி உள்ளது. மாநில அரசிடம் நிதி இல்லை. அது காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்தாலும் சரி, பாஜக ஆளும் மாநிலமாக இருந்தாலும் சரி மத்திய அரசு தான் உதவ வேண்டும்.
நாங்கள் வெளிப்படையாக பேசுகிறோம். ஆனால், பாஜக முதல்வர்கள் வாய்த்திருந்து பேச முடியாத சூழலில் உள்ளனர். அதுமட்டுமல்ல, பிரதமர் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, குறுகிய காலத்தில் எந்தந்த திட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்றினால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும், அதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தந்த நிதி ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்பதை நிபுணர் குழு பரிந்துரை செய்ய வேண்டும்.
அதற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் மேலும், புதுச்சேரிக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும், நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும், கடன் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று நினைக்கிறேன் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications