மீண்டும் சீனில் வந்த மாஜி.. கேஸ் கிடக்கட்டும்.. தில்லாக விமர்சித்த விஜயபாஸ்கர்! அடுத்த ரவுண்டு?!
புதுக்கோட்டை : அடுத்தடுத்து ரெய்டு, குட்கா வழக்கு, சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் என கடுமையான நெருக்கடியில் சிக்கியதால், ஈபிஎஸ் அணியின் மற்ற மாஜிக்களை போல அதிரடி காட்டாமல் அமைதி காத்து வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மீண்டும் 'தில்'லாக களமிறங்கிவிட்டார். திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை ஐசியுவில் இருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர்.
நாடு முழுவதும் மக்கள் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே நம்பர் 1 துறையாக இருந்த தமிழக சுகாதாரத்துறை திமுக ஆட்சி காலத்தில் ஐ.சி.யூவில் இருப்பதாக முன்னாள் சுகாராத்துறை அமைச்சரும், எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். விஜயபாஸ்கர் மீண்டும் அதிரடியாக பேசத் தொடங்கியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் சைலண்ட்
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பினர் மீடியாவுக்கு முன் ஓபிஎஸ்ஸையும், திமுக அரசையும் கடுமையாக விளாசி வரும் சூழலில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் மட்டும் 'அமைதியோ அமைதி' என்ற நிலையில் இருந்து வந்தார். அதற்குக் காரணம், வருமான வரித்துறை ரெய்டு, குட்கா வழக்கு என விஜயபாஸ்கருக்கு நெருக்கடிகள் அதிகமாக இருந்தன. போதாக்குறைக்கு, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசமை கமிஷன் விசாரணை அறிக்கையிலும் அவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இதனால், தீவிரமாக அரசியல் பணி ஆற்றாமல் இருந்து வந்தார்.

பாஜக பக்கம் பாய்ச்சல்?
இந்நிலையில், குட்கா வழக்கில் சிபிஐ அவர் மீதான குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த நிலையில், டெல்லி பாஜக தலைவர்களுடன் சில சந்திப்புகளையும் நடத்தினார் விஜயபாஸ்கர். வழக்குகள் தொடர்பாக விஜயபாஸ்கரின் நகர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கே தெரியப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால், பாஜக தலைவர்களுடன் பேசி வந்தா விஜயபாஸ்கர். இதனால், விஜயபாஸ்கர் பாஜகவில் சேரக்கூடும் என்ற பேச்சுகளும் அடிபட்டன. இந்நிலையில், மீண்டும் லைம்லைட்டு வந்துள்ளார் விஜயபாஸ்கர். சமீபத்தில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திமுக அரசை கடுமையாக விமர்சித்தார் விஜயபாஸ்கர்.

மீண்டும் சீனில் வந்த விஜயபாஸ்கர்
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனுக்கு வந்திருக்கிறார் விஜயபாஸ்கர். முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், கொரோனா காலகட்டத்தில் நாள்தோறும் பிரஸ் மீட் கொடுத்து வந்தார். இந்நிலையில், கொரோனாவின் அடுத்த வேரியண்ட் பரவத் தொடங்கி இருக்கும் சூழலில் அதுதொடர்பாக திமுக அரசிற்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் சீனுக்கு வந்ததில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனராம்.

என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை கவனமாக கையாளும் முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு விளக்க வேண்டும்
மேலும் பேசிய அவர், "வைரஸ் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவையான எச்சரிக்கை நடவடிக்கையும் தடுப்பு நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும், கொரோனா பரவிய போது அன்றைய அதிமுக அரசு எந்த விதமான மருந்தும் இல்லாமல் எதிர்கொண்டு வெற்றிகரமாக கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தது, இன்றைக்கு எல்லா விதமான மருந்துகளும் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் நாம் தெரிந்து வைத்துள்ளோம், அதனால் உருமாறிய கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு தமிழகத்தில் பரிசோதனை மையம் உள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா?
மேலும், "ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்களும் எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அரசு விளக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு வருடம் மட்டுமே எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பூஸ்டர் தடுப்பூசி போட்டு ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்று தெரியவில்லை தற்போது வரும் வைரஸை எவ்வாறு எதிர்கொள்வது என சுகாதாரத்துறை மக்களுக்கு விளக்க வேண்டும்.

நாடு தாங்காது
வல்லுனர் குழு தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் மாதத்தில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என்று கூறுகிறது. அதை எதிர் கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு 2 சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால் அது போதாது, அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். முன்பு நடந்ததைப் போல மற்றொரு பாதிப்பை இந்த நாடு தாங்காது, தற்போது தான் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாம் முன்னேறி வரும் சூழ்நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாடு தாங்காது.

நாங்க களத்தில் இறங்க ரெடி
அதனால் வல்லுனர் குழுவை அமைத்து உருமாறிய கொரோனா எவ்வாறு பரவுகிறது என்றும் அதன் தன்மை என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதலாவது இடத்தில் இருந்த தமிழக சுகாதாரத்துறை, திமுக ஆட்சி காலத்தில் ஐ.சி.யூவில் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தை பெயர் மாற்றி இல்லம் தேடி மருத்துவம் என்று விளம்பரப்படுத்துகின்றனர். தமிழக அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் அதிமுக உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் களத்தில் இறங்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications