விராச்சிலை மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி,100 பேர் படுகாயம் - போட்டியை நிறுத்த ஆணை
விராச்சிலையில் நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாடு முட்டிபார்வையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை: திருமயம் அருகே விராச்சிலையில் நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 100 பேர் படுகாயமடைந்ததால் போட்டியை நிறுத்த வட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல தீபாவளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலமாக நடைபெறும்.
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகப்படியான மஞ்சுவிரட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளை, வடமாடு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில், விராச்சிலை கிராமத்தில் இன்றைய தினம் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், திருமயம், சிவகங்கை, திருப்பத்தூர், கோனாபட்டு, கே.பள்ளிவாசல், கீழசீவல்பட்டி, பனையப்பட்டி, பொன்னமராவதி, சிங்கம்புணரி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மற்ற காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். பல காளைகள் இளைஞர்களிடம் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின. இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய 5000க்கும் மேற்பட்ட மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் பார்வையாளர்கள் கூட்டத்தில் மாடு புகுந்து முட்டித் தள்ளியது இதில் கருப்பையா என்ற இளைஞர் உயிரிழந்தார் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து மஞ்சுவிரட்டு போட்டியை உடனடியாக நிறுத்த வட்டாச்சியர் உத்தரவிட்டார்.
கடந்த 2019ஆம் இதே விரச்சிலை கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க வந்த மேலபனையூரைச் சேர்ந்த மருதப்பன் மகன் யோகநாதன் படுகாயமடைந்தார். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த யோகநாதனையும், லேசான காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகநாதன் பரிதாபமாக இறந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
கொரோனா பரவல் காரணமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தடை என அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியரும், காவல்துறை ஆணையரும் கண்டுக்கொள்ளாமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 600 காளைகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் காரணமாகவே உயிர்பலி ஏற்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.