புனேவில் கண்டறியப்பட்ட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. புதிய உருமாறிய கொரோனா.. அறிகுறிகள் என்ன
புனே: மிகக் கடுமையான அறிகுறிகளைக் கொண்டுள்ள B.1.1.28.2 என்ற புதிய ஒரு உருமாறிய கொரோனா வகையை புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே உருமாறிய கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. கொரோனா பாதிப்பு தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது.
சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, தற்போது தான் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வகைகள்
நாட்டில் கொரோனா 2ஆம் அலை உச்சத்திற்குச் செல்ல பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தியாவில் காட்டுத்தீயாகப் பரவிய உருமாறிய டெல்டா வகை B.1.617.2 கொரோனா இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா மிக வேகமாகப் பரவியதால் நிலைமை கையை மீறிச் சென்றது. இந்நிலையில் புதிய உருமாறிய கொரோனா வகை ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா
புனேவிலுள்ள தேசிய வைராலஜி மையத்தில், ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய B.1.1.28.2 உருமாறிய கொரோனாவை கண்டறிந்தனர். பிரேசில் நாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கு இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுவரை இந்தியாவில் உள்ள யாருக்கும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இந்த B.1.1.28.2 உருமாறிய கொரோனா இந்தியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தீவிர பாதிப்புகள்
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த புதிய உருமாறிய கொரோனா தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. B.1.1.28.2 உருமாறிய கொரோனாவை அழிக்க அதிகளவில் ஆன்டிபாடிகள் தேவைப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த உருமாறிய கொரோனா பரவல் இல்லை. எனவே, இது குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை என்றனர்.
Recommended Video

அறிகுறிகள் என்ன
இந்த புதிய கொரோனா வகையால் பாதிக்கப்படுவார்களுக்கு எடை இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நுரையீரலில் புண்கள், சுவாசக் குழாயில் கடுமையான வைரஸ் பாதிப்பு ஆகியவையும் ஏற்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் பரவலாக இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

12 ஆயிரம் உருமாறிய வகைகள்
இந்தியாவில் சுமார் 12,200க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா உள்ளதாக அரசு நடத்தி வரும் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை ஏற்படுத்தும் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. டெல்டா வகை கொரோனா மட்டுமே இந்தியாவில் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாட்கள் செல்ல செல்ல உருமாறிய கொரோனா வகைகள் அதிகமாகத் தோன்றும். எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications