நான் ஒரு சாதாரண கூத்தாடி... எனக்கு 2-ம் நம்பர் பிஸினஸ் இல்லை -கருணாஸ் எம்.எல்.ஏ.
ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார்.
கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

நடிகர் கருணாஸ்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அவர், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். இந்நிலையில் பெரும்பாலும் கருணாஸ் சென்னையிலேயே தங்கியிருப்பதாகவும், தொகுதியை எட்டிக்கூட பார்ப்பதில்லை எனவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே குற்றச்சாட்டு உள்ளது.

நான் கூத்தாடி
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது திருவாடானை தொகுதியில் ரூ.53 லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைக்க வந்த அவர், தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்க தன்னிடம் பணம் இல்லை எனக் கூறினார். மேலும், தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தனக்கு இரண்டாம் நம்பர் பிஸினஸ் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

நடிக்க போய்விடுவேன்
தற்போது ஒரு இடத்தில் வட்டிக்கு கடன் கேட்டுள்ளதாகவும், பணம் கிடைத்தவுடன் பிக் பாஸ் நடிகை ரித்விகாவுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க சென்றுவிடுவேன் எனவும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக, என அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்களால் இயன்ற உதவிகளை இந்த கொரோனா பேரிடர் காலத்தில் உதவி செய்து வரும் நிலையில் கருணாஸின் இத்தகைய பேட்டி திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசிடம் இருந்து இவர் பெறும் மாத ஊதியம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.

பணம் இல்லை
தன்னால் முடிந்தவரை திரையுலக கலைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை உதவி செய்துள்ளதாக கருணாஸ் கூறினார். வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு உதவ பணமில்லை எனக் கூறும் கருணாஸ், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் ஒரு நாளைக்கு சரக்கிற்கே ஒரு லட்ச ரூபாய் செலவழிப்போம் என பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications