மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது. அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என்று 4 நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தயாராக உள்ளது. முதல் கட்டமாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குனர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

2015ல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையும் இடம் தெரிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் ரூ.1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். 11 மாதங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25அன்று ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

2026ல் எய்ம்ஸ் மருத்துவமனை
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லோக்சபாவில் திருமாவளவன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பதிலளித்துள்ளார். அதுவரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மருத்துவமனைக் கல்லூரி
மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர்களை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. நடப்பு ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயில 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.

ஜிப்மர் மருத்துவமனை பேராசிரியர்கள்
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என்று 4 நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தயாராக உள்ளது. முதல் கட்டமாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளனர். இம்மாதம் 16ம் தேதிக்குப் பின் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications