ஏய் எப்புற்றா.. ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம்! ரொனால்டோவால் சவூதியின் அல் நஸ்ர் அணிக்கு இவ்வளவு லாபமா?
ரியாத்: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளரால் அவமதிக்கப்பட்டு தோல்வியடைந்து கண்ணீரோடு வெளியேறிய நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல் நஸ்ர அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று ஆசிய கால்பந்து லீகிற்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் அல் நஸ்ர் அணிக்கு கிடைக்கப்போகும் லாபம் என்ன? விரிவாக காண்போம்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் அணியை கடந்து பல நாடுகளின் கிளப் அணிகளில் விளையாடி தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக உலக ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர்.
கிளப் போட்டிகளில் விளையாடியதன் மூலமாகவே கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாயும், ஏராளமான விளம்பரங்களும் கிடைத்தன.
ரொனால்டோ கால்பந்து வாழ்வின் சறுக்கல்.. ஐரோப்பா லீக்கில் இருந்து வெளியேறியது ஏன்? ரசிகர்கள் வருத்தம்!
ரொனால்டோவின் கிளப் அணிகள்
போர்ச்சுகலை சேர்ந்த ஸ்போர்டிங் சிபி கிளப் அணியில் விளையாட தொடங்கிய அவர், அதன் பிறகு 2003 முதல் 2009 வரை பிரிட்டனின் புகழ்பெற்ற அணியான மான்செஸ்டர் யுனைடேடுக்காக இங்கிளிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணியில் அவர் 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.
மான்செஸ்டரில் இருந்து விலகல்
இதனை தொடர்ந்து ஜுவண்டஸ் என்ற இத்தாலி அணியில் 2018 ஆம் ஆண்டு விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ 2021 வரை அந்த அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு அவர் மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டேட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து அவர் வெளியேறினார்.
சவூதி அணியில் ரொனால்டோ
மான்செஸ்டர் அணியுடனான மோதல், 2022 உலகக்கோப்பையில் அவமதிப்பு என ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்த தருணத்தில்தான், சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணியில் ரீ எண்ட்ரி கொடுத்து இருக்கிறார் ரொனால்டோ. 65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபிய லீக் அணிக்காக விளையாட ரொனால்டோ ரூ.4,400 கோடிக்கு 2025 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
ரொனால்டோ கருத்து
இதுகுறித்து பேசிய ரொனால்டோ, "ஐரோப்பிய கால்பந்தில் நினைத்த அனைத்தையும் வென்றேன். ஆசியாவில் என் அனுபவத்தை பகிர இதுவே சரியான தருணம். புதிய அணி வீரர்களுடன் விளையாடும் நாளை எதிர்பார்க்கிறேன். அவர்களின் வெற்றிக்கு துணையாக இருப்பேன்." என்று கூறி உள்ளார்.
அல் நஸ்ர் அணி
அல் நஸ்ர் அணி சவூதி அரேபியா புரோ லீக் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை 9 பிரீமியல் லீக் தொடர்கள், 6 கிங் கோப்பைகள், 3 கிரவுன் பிரின்ஸ் கோப்பைகள், 3 கூட்டமைப்பு தொடர்கள், 2 சவூதி சூப்பர் கோப்பைகள் தொடரில் கோப்பையை வென்றுள்ள அந்த அணி கடைசியாக 2019 ஆம் ஆண்டு சவூதி புரோ லீகில் வெற்றிபெற்றது.
சர்வதேச கோப்பைகள்
அதேபோல் சர்வதேச அளவிலான தொடர்களை எடுத்துக்கொண்டால் ஜிசிசி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறையை கோப்பை வென்றுள்ளது. அதேபோல் ஆசியாவின் கவுரவம் வாய்ந்த கால்பந்து தொடரான AFC கால்பந்து தொடரிலும் 1998 ஆம் ஆண்டு வெற்றிபெற்று இருக்கிறது. ரொனால்டோ வருகையால் மீண்டும் இந்த தொடரில் வெல்ல முடியும் என அந்த அணி நம்புகிறது.
ரொனால்டோவால் ஜாக்பாட்
அல் நஸ்ர் அணி இவ்வளவு தொகை கொடுத்து ரொனால்டோவை வாங்க மற்றொரு காரணம் அவரது வருகையால் அணிக்கு கிடைக்கும் விளம்பரமும், அதற்கான கட்டணமும் பன்மடங்கு பெரும் என்பதால்தான். அதுமட்டுமின்றி பெரும்பாலானோருக்கு தெரியாத அணியாக இருந்த அல் நஸ்ர் இன்று ஒரே நாளில் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாக மாறி உலக மக்கள் மத்தியில் புகழ்பெற்று உள்ளது.