"விட்றாதீங்க".. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. அதிகாரிகள் ஸ்பீடு.. இன்று 2வது நாளாக முதல்வர் சேலத்தில் ஆய்வு
இன்று 2வது நாளாக சேலம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார்
சேலம்: சேலம் மாவட்டத்தில், 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று 2வது நாளாக பங்கேற்கிறார். இதில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் மா.சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மண்டல வாரியாக, மாவட்டங்களில் செயல்படுத்தப்படும், அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக "கள ஆய்வில் முதல்வர்" என்ற திட்டத்தை துவக்கினார்.

வேலூர்
அதன்படி, முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்தார்.. கடந்த 1, 2 தேதிகளில் வேலூர் மண்டலத்துக்குட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.. 4 மாவட்ட போலீஸ் எஸ்பிக்களுடன், சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.. அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மறுநாள் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.. அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தவும் அப்போது முதல்வர் அறிவுறுத்தினார்.

நான் முதல்வன்
அந்தவகையில், இப்போது சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். சேலம் மண்டலத்திற்குட்பட்ட ஆய்வு கூட்டம் நேற்றும் இன்றும் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.. நேற்றைய தினம் மாலை, சேலம் மாவட்ட கலெக்டர் ஆபீசில் முதல்வர் ஸ்டாலின், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட விவசாயிகள், தாட்கோ திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்... இதனைத் தொடர்ந்து, "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார்..

டிஐஜி தகவல்
பிறகு, கலெக்டர் அலுவலக 4-வது தளத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சரக டிஐஜி, 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த 4 மாவட்டங்களில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நேற்றைய தினம் இரவு சேலத்தில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கலெக்டர் அலுவலகம்
அங்கு 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. இதில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் மா.சுப்பிரமணியன் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது... முன்னதாக, பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்..

போலீஸ் ஸ்டேஷன்
அதேபோல, சேலம் அரசு மருத்துவமனை, மாநகரிலுள்ள ஓரிரு போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிகிறது.. சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு ஓமலூர் அடுத்த காமலாபுரம் செல்லும் ஸ்டாலின், இன்று பிற்பகல் 4.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.. முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications