சேலத்தில் விஜயகாந்தின் உருவபொம்மையை அடக்கம் செய்த தேமுதிக தொண்டர்கள்! வற்றாத அன்புக்கடல்!
சேலம்: சேலத்தில் விஜயகாந்தின் முழு உருவ பொம்மையை பாடையில் எடுத்துச் சென்று இறுதிகாரியங்கள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்த நிகழ்வு நடந்துள்ளது. பணம், பதவி, அந்தஸ்து என எதையும் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகியவர் விஜயகாந்த் என்பதை இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.
விஜயகாந்த் மீதான பாசத்தையும், அன்பையும் சேலத்தை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றனர். சென்னை கோயம்பேட்டுக்கு செல்லாவிட்டால் என்ன, ஊரிலிருந்தவாறே அவருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியங்களை செய்வோம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேமுதிக தொண்டர்கள் மொட்டை அணித்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.

அதில் குறிப்பாக சேலத்தை சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் சிலர், இன்னும் ஒரு படி மேலாக விஜயகாந்தின் உருவ பொம்மையை தயார் செய்து அதனை மக்கள் அஞ்சலிக்காக வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேனில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்திருக்கின்றனர். இது போன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன்னர் நடந்ததாக தெரியவில்லை. தலைவர்கள் இறந்தால் அவர்களின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
சேலத்தில் தான் முதல் முறையாக இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. சேலத்தை பொறுத்தவரை இப்போது திமுகவில் இருக்கக் கூடிய எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், ஒரு காலத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுவாகவே அந்தப் பகுதியில் விஜயகாந்த் அபிமானிகள் அதிகம். இதனிடையே பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு திரண்டு வந்த தேமுதிக நிர்வாகிகள் பலரும் இன்னும் ஊர் திரும்பவில்லை.
காரணம் விஜயகாந்த் முகத்தை தான் அருகில் சென்று பார்க்க முடியவில்லை, அவர் சமாதியில் நின்றாவது வணங்கிவிட்டு போகிறோம் என்பது தான் அவர்கள் முன் வைக்கும் கோரிக்கையாகும். இன்று காலையிலிருந்து அவர்கள் பிரேமலதாவுக்கு முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், விஜயகாந்த் நினைவிடம் அருகே தங்களை அனுமதிக்க வேண்டும் என்பதேயாகும்.












Click it and Unblock the Notifications