ஏதோ சதி நடக்குது.. யார் பேச்சையோ கேட்டு தப்பான வழியில போகுது திமுக அரசு.. எடப்பாடி பழனிசாமி பரபர!
சேலம் : தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் ஆதீன விவகாரங்களுக்குள் தலையிட்டதில்லை. இன்றைய ஆட்சியில் ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கந்து வட்டியை தடை செய்ய இயலாத ஒரு அரசாகத்தான் இன்றைய திமுக அரசு இருக்கிறது என விமர்சித்துள்ளார்.
அந்த 'ரிப்போர்ட்'.. நடுங்கிப் போன எடப்பாடி..'யாரையும் நம்ப முடியல’- கட்சியை கைக்குள் வைக்க திட்டம்!
ஆன்லைன் ரம்மி
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஆன்லைன் சூதாட்டத்தில் கலந்துகொண்ட பலர், தங்களது சொத்துகளை இழந்து, விலைமதிக்க முடியாத உயிரையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்தில்கூட இரண்டு பேர் இறந்துள்ளனர். இது ஒரு துயரமான சம்பவம். நான் பலமுறை இந்த அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டத்தை இயற்றி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாடத்தை தடை செய்ய வேண்டும்.
எல்கேஜி யுகேஜி
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தமிழக அரசு மூடியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை குழந்தைகள்தான். அப்படியொரு வாய்ப்பை அதிமுக அரசு உருவாக்கித் தந்தது. அந்த வகுப்புகளை தமிழக அரசு மூடியிருப்பது, கண்டிக்கத்தக்கது, வருந்ததக்கது." எனத் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கந்துவட்டி மிகப்பெரிய கொடுமையாக உருவெடுத்துள்ளது. ஒரு ஆயுதப்படை காவலரே, கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் இறந்திருக்கிறார் என்று சொன்னால், கந்து வட்டியை தடை செய்ய இயலாத ஒரு அரசாகத்தான் இன்றைய திமுக அரசை பார்க்க வேண்டியுள்ளது.
யாருடைய பேச்சையோ கேட்டு
தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தது. அதிமுகவும் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த ஆதீன விவகாரங்களுக்குள் யாரும் தலையிடவில்லை. இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதிச் செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன். எந்த மதமாக இருந்தாலும், எந்த திருக்கோயிலாக இருந்தாலும், அந்தந்த ஐதீகத்தின்படி வழிபாடு நடைபெற வேண்டும், அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ஏதேதோ தவறான வழிகளில், யாருடைய பேச்சையோ கேட்டு செயல்படுகின்றனர். இது தவறான போக்கு" எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டிக்கர் ஒட்டும் ஸ்டாலின்
இன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக கொடி யேற்றும் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஏதோ சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்த விதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். நான் போட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டு கொண்டிருக்கிறார். அனைவரும் கூறுவதுபோல் ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையைத்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் எனப் பேசினார்.
அதிமுக திட்டங்கள் முடக்கம்
மேலும் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நகரங்களுக்கு இணையான திட்டங்களை கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தியது. தரமான சாலைகள் அமைக்க திட்டம் வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
வாக்குறுதி என்ன ஆனது
மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு லஞ்சத்தில் மட்டும்தான் முதலிடத்தில் உள்ளது எனக் கடுமையாகச் சாடினார்.