பொன்னியின் செல்வன் ரசிகர்களை பதறவைத்த தியேட்டர்.. ‘பாலில் பூச்சிகளே.. தீயரி எசமாரி..’ அதிரடி ரெய்டு!
சேலம் : சேலத்தில் 'பொன்னியின் செல்வன்' படம் திரையிடப்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் நகரில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்கில், நேற்று 'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க வந்த ரசிகர்கள், குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் மிதந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து அதிரடி சோதனை மேற்கொண்டு, காலாவதி தேதி இல்லாத பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், குளிர்பானங்கள் மற்றும் பூச்சி விழுந்த பால் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன்.. பகை மறவா பாண்டியர் வாரிசுகள் என்ற பெயரில் மதுரையில் ஒரு அலப்பறை போஸ்டர்
பொன்னியின் செல்வன்
தமிழகம் முழுவதும் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று வெளியானது. சேலத்திலும் பல்வேறு திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் மூன்று திரைகளில் வெளியானது.
சேலம் தியேட்டர் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் நேற்று அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் கேண்டீனில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தின்பண்டங்களை வாங்கிய போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் குளிர்சாதன பெட்டியில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த டீம்
ரசிகர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவலிங்கம் தலைமையிலான டீம் திரையரங்கில் உள்ள இரண்டு கேன்டீன்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்த 150க்கும் அதிகமான குளிர்பானங்கள், பத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள் உள்ளிட்டவற்றைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாலில் பூச்சி - பறிமுதல்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 50 லிட்டருக்கும் அதிகமான பால் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து திரையரங்கு முன்பாக உள்ள கால்வாயில் கொட்டி அழித்தனர். குறிப்பாக, பாலில் இறந்த பூச்சிகள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரையரங்குக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.