பண மோசடி வழக்கில் உதவியாளர் கைது.. எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கடி.. விசாரிக்க முத்தரசன் கோரிக்கை!
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளராக இருந்தார். இவர் சுமார் 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமிக்கு உதவியாளராக இருந்துள்ளார்.
மணி அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் போலீசில் புகார் கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மணி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மணி தலைமறைவானார். தலைமறைவாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையில் போலீசார் தேடி வந்தனர்.

கைது செய்தனர்
இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் மணி. போலீசார் தேடி வந்த நிலையில் இன்று மணி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பண மோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்
சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முத்தரசன் கூறியதாவது:- அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்த பண மோசடி விவகாரத்தில் முன்னாள் முதல்வரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதைய முதல்வர் தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்காது. எனவே இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்.

மீண்டும் ஆய்வு தேவை
மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்னரும் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க மீண்டும். எனவே மத்திய குழு மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications