அப்படி ஒரு எண்ணமே திமுக அரசுக்கு இல்லை.. ஓபிஎஸ் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த அமைச்சர் கே.என் நேரு!
சேலம் : சேலத்தில் அம்மா உணவகங்களை மூட முயற்சி நடந்து வருவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்றும், தேவைக்கு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால் அவர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று மாநகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
காந்தி,நேரு வாரிசுகள் பேசினால்..கோட்சே வாரிசுகளுக்கு கசக்கத்தானே செய்யும்! விளாசிய முதல்வர் ஸ்டாலின்
சேலத்தில் அமைச்சர் நேரு
சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில், மேயர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் 75 இலகுரக வாகனங்கள், ஸ்டையின்லெஸ் ஸ்டீல் காம்பாக்டர் 600 பின்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.10.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
குப்பையில்லா நகரம்
பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் குப்பையில்லா நகரமாக உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்திட நடவடிக்கை மேற்கொள்ள சில வழிமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளது. எதிர் வரும் காலங்களில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் குப்பையில்லா நகரமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பேட்டி
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முழுவதும் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு அப்பகுதிகளில் மரங்களை நடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், குப்பைகள் உற்பத்தியாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரித்து சேகரித்து மக்காத குப்பைகளை தொழிற்சாலைகளுக்கும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி மீண்டும் மக்களுக்கும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.
அப்படி ஒரு எண்ணம் அரசுக்கு இல்லை
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளதாகவும், அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழ்நாடு
அரசுக்கு இல்லை என்றும், தேவைக்கு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால் அவர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஓபிஎஸ் குற்றச்சாட்டு
சமீபத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சேலத்தில் அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சியும், திமுகவினரும் ஈடுபட்டுள்ளதாகவும், அதிமுகவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.