சேலம் மாவட்டத்தில் இடைவிடாத மழை... ஏற்காடு மலைப் பாதையில் மண் சரிவு- போக்குவரத்து நிறுத்தம்!
சேலம்: சேலம் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்க்கிறது. இதனால் சுற்றுலா மையமான ஏற்காடு மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதேபோல் திருச்சியிலும் நேற்று கனமழை தொட்டித் தீர்த்தது. திருச்சி நகரில் பல இடங்களில் மழைவெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்றிரவு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.
மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்கொண்டு சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல்துறையின் சோதனைசாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் சேலத்தில் பணிகளை முடித்துவிட்டு வழக்கமாக ஏற்காடு செல்லும் குடியிருப்புவாசிகள் மற்றும் சேலத்திலிருந்து ஏற்காடு சென்று பணிபுரிந்து வீடு திரும்பும் பணியாளர்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல் திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 4 மணியளவில் தொடங்கி பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. திருச்சி மாநகரின் கருமண்டபம், மிளகுபாறை, கன்டோன்மென்ட், தில்லை நகர், காந்தி மார்க்கெட், பால்பண்ணை, காட்டூர், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், சிந்தாமணி, புத்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இரவும் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே கோவை மேட்டுப்பாளையம்- உதகை ரயில் பாதையில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications