மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியது.. நீர்வரத்து அதிகரிப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.51 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி ஆகும். அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15,550 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, தற்போது 90,873 கன அடியாக அதிகரித்து உள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து நீர் வெளியேற்றப்பட்டதும் இந்த அதிக நீர் வரத்திற்கு காரணம் ஆகும். மேட்டூர் ஆணை வரலாற்றில் 68வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது.
இதையடுத்து நீர் பாசன பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.18 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. இதனால் மேட்டூருக்கும் நீர் வரத்து உயர்ந்து உள்ளது.. 4வது நாளாக இன்றும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு 4வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. முன்னதாக கோடை காலத்திலேயே விடாமல் மழை பெய்து வந்தது. அப்போது குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திரம் அடைந்த பின் இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை.












Click it and Unblock the Notifications