கன்னியாகுமரியை கலக்க வரும் ராகுல்! தோழமை கட்சிகள் புறக்கணிப்பா? ஓடோடி வந்த மூத்த ’தலை’! என்னாச்சு?
சேலம் : ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியை தோழமைக் கட்சிகள் புறக்கணிப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர் எனவும், இதில் உண்மை இல்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கும் அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

ராகுல்காந்தி
குமரி மாவட்டத்தில் மட்டும் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப். 7-ம் தேதி காலை சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வரும் அவர், காந்தி மண்டபம் அருகே மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினும் பங்கேற்கிறார். பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அனைவரும் மரியாதை செலுத்துகின்றனர். அங்கிருந்து ராகுல்காந்தியின் நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புறக்கணிப்பு?
நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இதனிடையே ராகுலில் இந்த பயணத்தை தோழமை கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அழகிரி மறுப்பு
ஆனால் இதனை கே.எஸ்.அழகிரி முற்றாக மறுத்துள்ளார். சேலம் சூரமங்கலம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் தோழமைக் கட்சிகளை புறக்கணிப்பதாக தவறான தகவல்கள் வருகின்றன. இதில் உண்மை இல்லை . இது காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி. முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை எடுத்து அதை தலைவர் ராகுல் காந்தியிடம் கொடுத்து பின்னர் பாதயாத்திரை தொடங்கும். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பாதயாத்திரையில் உடன் நடந்து செல்ல உள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications