தயங்கி நிற்காமல் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்துங்க! மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதயநிதி பேச்சு
சேலம்: தமிழ்நாடு அரசின் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகக் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

சேலம் அரசு நிகழ்ச்சி
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் ஒரே நாளில் 26,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்திற்கு நான் பலமுறை வருகைபுரிந்துள்ளேன். ஆனால் அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக சேலம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

கொலுசு உற்பத்தி
சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதன்படி, அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24.55 கோடி மதிப்பீட்டில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உதயநிதி பேச்சு
சேலம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சேலம் மாவட்டம், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பெரியார் பல்கலைக்கழகம் அருகில் இப்பணிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்கள்
குறிப்பாக, பால் கொள்முதலில் சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் கடந்த 13.12.2022 அன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன புதிய தொழிற்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்திற்கென இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தும், அதனைச் செயல்படுத்தியும் வருகிறார். இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகக் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.












Click it and Unblock the Notifications