உயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு
Recommended Video
சேலம்: சேலத்தில் உயிரியல் பூங்காவில் நடத்தி வந்த கடையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பூட்டியதால் தனது செயற்கைக் காலை வனத்துறையினரிடம் ஒப்படைக்க தனது குடும்பத்தினருடன் மாற்றுத்திறனாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வளாகத்தில் பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் செல்வராஜ். மலைவாழ் இனத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான இவருக்கு மாத வாடகை ஒப்பந்த அடிப்படையில் கடை நடத்த வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
கடந்த 13 ஆண்டுகளாக மாத வாடகை செலுத்தி செல்வராஜ் கடையை நடத்தி வந்த நிலையில் கடந்த மாதம் திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வனத்துறையினர் கடையை பூட்டினர். இதனால் மனவேதனை அடைந்த செல்வராஜ் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு கொடுத்துள்ளார்.
இருப்பினும் வனத்துறையினர் செவி சாய்க்காத நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த செல்வராஜ், தனது செயற்கைக் காலையும் கழற்றி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வனத்துறை அதிகாரிகள் இவரை தடுக்க முற்பட்ட போது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியான செல்வராஜ் நடத்தி வந்த கடை திடீரென பூட்டப்பட்டதால் தான் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாகவும் அந்த கடைக்காக கடன் வாங்கி செய்த முதலீடும் வீணாகிவிட்டது என்றும் செல்வராஜ் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.
தங்களுக்கு மீண்டும் கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும் அல்லது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வனக்காவலர் உத்தரவின் பேரிலேயே கடை பூட்டப்பட்டதாகவும், வனத்துறை உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி செல்வராஜ் குடும்பத்திற்கு என்ன தீர்வு கொடுக்க வேண்டும் என்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் விளக்கமளித்தனர்.