மாட்டிறைச்சி கடையா? இந்து முன்னணி எதிர்ப்பால் அனுமதிக்காத போலீஸ் -போராட்டம் செய்த பியூஷ் மானுஷ் கைது
சேலம்: இந்து முன்னணியின் எதிர்ப்பு காரணமாக சேலத்தில் மாட்டிறைச்சி கடை நடத்த போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், கறிக்கடை உரிமையாள மற்றும் அவரது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளர் ஜலால்புரா பகுதியைச் சேர்ந்தவர் பாதுஷா மைதீன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தனது வருமானத்தில் சேமித்து வைத்த பணத்தை கொண்டு சீலநாயக்கன்பட்டி சண்முகா நகர் பகுதியில் மாட்டிறைச்சி சில்லிகடை ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டார்.

இந்து முன்னணி எதிர்ப்பு
மாட்டிறைச்சி கடை தொடங்குவதற்கான முன்தொகையையும் கட்டிட உரிமையாளரிடம் பாதுஷா மைதீன் வழங்கி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அப்பகுதியில் மாட்டிறைச்சி சில்லிகடை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அனுமதிக்காத போலீஸ்
அதன் அடிப்படையில் பாதுஷா மைதீன், மாட்டிறைச்சி கடை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் பாதுஷா மைதீன் சேலம் மாநகராட்சி அதிகாரியிடம் மாட்டிறை கடை நடத்த அனுமதி கேட்டு மனு வழங்கி உள்ளார். மனுவை பரிசீலித்த மாநகராட்சி அதிகாரி காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்றபின் கடை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
இதனை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற பாதுஷா மைதீன் மாட்டிறைச்சி கடை நடத்த தடையில்லா சான்று கேட்டு உள்ளார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணமாக சொல்லி சேலம் காவல்துறையினர் பாதுஷா மைதீன் மாட்டிறைச்சி கடை நடத்த தடையில்லா சான்று வழங்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பியூஷ் மானுஷ் கைது
இந்த நிலையில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, பியூஸ் மானுஷ் மற்றும் பாதுஷா மைதீன் தனது குடும்பத்தினருடன் பதாகைகள் ஏந்தி கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றதால்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் பியூஸ் மனுஷ் மற்றும் பாதுஷா மைதீன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications