வீரபாண்டி ராஜா நினைவிடத்தில் பாமக எம்.எல்.ஏ.அருள்! நன்றி மறவாத நல் உள்ளம்! நெகிழ்ந்த குடும்பத்தினர்
சேலம்: வீரபாண்டி ராஜாவின் முதலாமாண்டு நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள்.
வீரபாண்டி ராஜா உயிருடன் இருந்தவரை அவருடன் இருந்த திமுகவினரே பலர் அஞ்சலி செலுத்த வராத நிலையில், பாமக எம்.எல்.ஏ.வின் வருகையை ராஜாவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
வீரபாண்டி ராஜாவை பொறுத்தவரை திமுகவின் மூத்த முன்னோடி மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
சேலத்துச் சிங்கம்
கருணாநிதியால் சேலத்துச் சிங்கம் என வர்ணிக்கப்பட்டவர் வீரபாண்டி ஆறுமுகம். மனதில் தோன்றிய கருத்தை கருணாநிதியிடமே நேருக்கு நேர் தெரிவித்து உரிமையுடன் விவாதம் செய்யும் இடத்தில் இருந்தவர். கருணாநிதியின் பயணங்களில் அவருக்கு பேச்சுத்துணையாக தமிழகமெங்கும் பயணித்தவர். கே.என்.நேரு உள்ளிட்ட இன்னும் சிலரை 1989-பேட்ச் அமைச்சரவையில் கருணாநிதியிடம் பரிந்துரை செய்தவர்.
அதிகாரமிக்க
இப்படி திமுகவில் அதிகாரமிக்கவராய் வலம் வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவரது மறைவுக்கு பிறகு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் கட்சியின் நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்கப்பட்டு அதில் ஒன்றுக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் வீரபாண்டி ஆ.ராஜா. இந்நிலையில் கடந்த 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, வீரபாண்டி ஆ.ராஜா மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்தப் பதவியில் கட்சிப்பணியாற்றி வந்தார்.
திடீர் மாரடைப்பு
இதனிடையே திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமாகி ஒரு வருடக் காலம் ஆகிவிட்டது. அவரது மரணச் செய்தியறிந்து முதலமைச்சர் ஸ்டாலினே மதுரையிலிருந்து சேலம் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அந்தளவுக்கு கட்சியின் மூத்த முன்னோடி என்கிற வகையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே பூலவாரி கிராமத்தில் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வீரபாண்டி ராஜா நினைவிடத்துக்கு சென்ற பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார்.
வீரபாண்டி ராஜா மகள்
மேலும், வீரபாண்டி ராஜா மகளிடமும் அருள் எம்.எல்.ஏ. சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். வீரபாண்டி ராஜாவின் மகளுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதால் அது தொடர்பாக ஏதேனும் பேசப்பட்டிருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. வீரபாண்டி ராஜா உயிருடன் இருந்தவரை அவருடன் இருந்த திமுகவினரே பலர் அஞ்சலி செலுத்த வராத நிலையில், பாமக எம்.எல்.ஏ.வின் வருகையை ராஜாவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தது குறிப்பிடத்தக்கது.