மர்டர் டூ மிலிட்டரி.. 25 வருடங்களுக்கு பிறகு சேலத்தில் கொலையாளி சிக்கியது எப்படி? ஷாக் தகவல்
சேலம்: சேலம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்து விட்டு தலைமறைவான நபர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், வழக்கு தூசு தட்டப்பாட்டு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கட்டன் என்ற விவசாயிக்கும் இடையே விவசாயநிலம் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டது. இதையடுத்து ஊர்பொதுமக்கள் சேர்ந்து சமாதானம் பேசிய நிலையிலும் மீண்டும் தகராறு ஏற்படுவது வழக்கமாகவே தொடர்ந்துள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல்: 15 வேட்பாளர்களுடன் 4-வது பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் விவசாயி லட்சுமணனை, வெங்கட்டன் மற்றும் அவருடைய மகன்கள் தனபால், வேணுகோபால் ஆகிய மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விவசாயி லட்சுமணன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலை வழக்கு
லெட்சுமணன் கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தீவட்டிபட்டி போலீசார், வெங்கட்டன் மற்றும் அவருடைய மூத்த மகன் தனபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் வெங்கட்டனின் மற்றொரு மகனான வேணுகோபால் தலைமறைவான நிலையில், அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என போலீசாருக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் லெட்சுமணன் கொலை செய்யப்பட்ட வழக்கு சேலம் நீதிமன்றத்தில் வேணுகோபால் தலைமறைவாக இருந்ததாகவே போலீசாரால் கூறப்பட்டு நடந்து வந்தது. கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கொலை செய்ததாக வெங்கட்டன் மற்றும் அவரது மகன் தனபாலுக்கு நான்காண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமறைவு குற்றவாளி
அப்போதே தலைமறைவாக இருந்த வெங்கட்டனின் மகன் வேணுகோபாலையும் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே தற்போது வெங்கட்டன் மற்றும் தனபால் ஆகியோர் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்து விட்டனர். ஆனாலும் வேணுகோபாலை போலீஸார் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தீவிர நடவடிக்கை எடுத்தார். அதன்படி தனிப்படை போலீசார், வேணுகோபாலை தீவிரமாக தேடி வந்தனர் . அப்போது வேணுகோபால், சேலம் குரங்கு சாவடி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தது தெரியவந்தது.
ராணுவத்தில் சேர்ந்து பணி
இதையடுத்து வேணுகோபாலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. வேணுகோபால் தலைமறைவாக இருந்த 25 ஆண்டுகளில், 24 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வேணுகோபால் கடந்த 1889 ஆம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது தான் நிலத்தகராறில் அடிதடி பிரச்சனை ஏற்பட்டு இந்த கொலை நடந்தது. இதையடுத்து வேணுகோபால் மீண்டும் ராணுவ பணிக்கு சென்றுவிட்டார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு
ஆனால் அப்போது போலீசாருக்கு அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அந்த சமயத்தில் வேணுகோபால் ராணுவத்தில் அரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பணி மூப்பின் காரணமாக, வேணுகோபால் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு செல்லாமல், சேலம் அருகே குரங்கு சாவடி பகுதியில் வாடகை வீட்டில் குடுப்பத்திருடன் வசித்து வந்த போதுதான் காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு பாராட்டு
இதையடுத்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேணுகோபால் சிறையில் அடைக்கப்பட்டார். 25 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த வேணுகோபால், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24½ ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளியை கைது செய்த செய்த தீவட்டிப்பட்டி போலீசாரை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பாராட்டினார்.