“ரமணா” பகீர்.. இறந்த பெண்ணுக்கு 3 நாளாக சிகிச்சை! நாடகமாடியதா சேலம் மருத்துவமனை? உறவினர்கள் முற்றுகை
சேலம்: 3 நாட்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படம் அரசு துறைகளில் நிலவும் ஊழல்களையும், பொதுமக்கள் ஏமாற்றப்படும் விதத்தையும் திரைபோட்டு காட்டியது.
பிரம்மாண்ட வெற்றியை பெற்ற அந்த திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளன. அதில் முக்கியமானது மருத்துவமனை காட்சி.

ரமணா திரைப்பட காட்சி
தனது வளர்ப்பு மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற விஜயகாந்திடம் பல்வேறு காரணங்களை சொல்லி ஆயிரக்கணக்கில் வசூலிப்பார்கள். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடலை எடுத்து கொண்டு வந்த அந்த தனியார் மருத்துவமனையில் தனது அண்ணன் என்று சொல்லி அனுமதிப்பார்.

மருத்துவமனையில் கொள்ளை
தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் உயிரிழந்ததை தெரிவிக்காமல் அறுவை சிகிச்சை அறையில் வைத்து சிகிச்சை அளிப்பதைபோல் நடித்து பல்லாயிரக்கணக்கில் பில் போட்டு கொடுத்து கட்டணம் கேட்பார்கள். அப்போது விஜயகாந்த் உண்மையை சொல்லி, மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டி பணம் பெற்று உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு கொடுப்பார்.

சேலத்தில் அதேபோன்ற சம்பவம்
நிஜத்தில் பல தனியார் மருத்துவமனைகளில் அப்போது அரங்கேறிய இந்த மோசடியை இப்படத்தில் காட்டி இருப்பார்கள். இதேபோன்ற உண்மை சம்பவம் ஒன்று சேலத்தில் தற்போது அரங்கேறி இருக்கிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார்.

வனிதா மனநலம் பாதிப்பு
இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வனிதாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து சென்று இருக்கிறார் மாதேஸ்வரன். வனிதாவின் நிலைமை மோசமாகி அவர், தனியாக பேசி வந்துள்ளார். இதனால், சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வனிதாவுக்கு மூளைகாய்ச்சல் ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து வனிதாவை அவரது கணவர் மாதேஸ்வரன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர் வனிதாவின் உறவினர்கள் தகராறு செய்ததால், மீண்டும் அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார் மாதேஸ்வரன்.

உயிரிழந்த வனிதா
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வனிதா இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளது. இதனிடையே மூன்று நாட்களுக்கு முன்பே வனிதா உயிரிழந்து விட்டதாகவும், ஆனால் இதனை மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் தெரிவிக்காமல் மறைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி தொடர்ந்து பல முறையில் கட்டணம் பெற்று வந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.

உறவினர்கள் முற்றுகை
இதனை கண்டித்து வனிதாவின் உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனை முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த நபருக்கு 3 நாட்களாக சிகிச்சை அளித்தது ஏன் என சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனிதாவின் கணவர் மாதேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற அஸ்தம்பட்டி காவல்துறையினர் முற்றுகையிட்ட வனிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வனிதாவின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications