“ஸ்டாலின்தான் வாராரு.. சேலம் குலுங்கணும்.. எடப்பாடி அதிரணும்”- நேரு தலைமையில் ஸ்கெட்ச் போட்ட திமுக!
சேலம்: முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், வரும் மே 24ஆம் தேதி சேலம் வருகைதர உள்ளார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சேலம் திமுகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஓராண்டு திமுக ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறும் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஓராண்டு சாதனை
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மே 7ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 'ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் மூத்த தி.மு.க நிர்வாகிகள், முக்கிய பேச்சாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
வெற்றி விழாவாக
கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெற்றி விழாக்களை நேரடியாக பங்கேற்று நடத்த முடியவில்லை. இதனால், இந்தக் கூட்டங்களை தற்போது சிறப்பாக நடத்திக்காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலத்தில் ஸ்டாலின்
அந்தவகையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறும் கூட்டத்தில் மே 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. அதற்கான பணிகளும் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், வானிலை மையம் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக இந்தக் கூட்டம் மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது.
எடப்பாடி கோட்டையில்
மாநாடு, கூட்டம் என எதுவாக இருந்தாலும், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தும் கே.என்.நேருவிடமே இந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டதற்கும் காரணம் இருக்கிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தி.மு.க தனது பலத்தைக் காட்டுவதற்காகவே ஆத்தூரில் பிரமாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது.
அதிரடி ஏற்பாடுகள்
சேலம் ஆத்தூரில் வரும் மே 24ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அமைச்சர் கே.நேரு தலைமையில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
1 லட்சம் பேர்
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் தொண்டர்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்றும், 'படை பெருத்ததோ... பார் சிறுத்ததோ...' என காண்போர் வியக்கும் வண்ணம் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.