கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்.. யார் இது திருடனா? மிளகாய் பொடியை முகத்தில் தூவி.. 7 பவுன் நகை அபேஸ்!
சேலம்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த மர்ம நபர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் இந்த துணிகரக் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது சேலம் மக்களை பீதியடையச் செய்துள்ளது.
இசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உஷார்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டதால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்தவர்கள் வீட்டுக்கு சென்று பாடல்கள் பாடுவது; ஜெபம் செய்வது போன்ற நிகழ்ச்சிகளும் இந்த காலத்தில் அதிகம் காணப்படும். ஆனால், இந்த நடைமுறையை தங்களுக்கு சாதகமாக சில திருடர்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்கு சான்றாக சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வீட்டுக்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே உள்ள டிவிஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன் ராணி (61). பிள்ளைகள் அலுலகத்துக்கு சென்றுவிட்டதால், பொன் ராணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று மதியம் இவரது வீட்டுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து ஒருவர் வந்துள்ளார். கிறிஸ்துமஸ் தாத்தா வந்திருப்பதை பார்த்தும் மகிழ்ச்சியடைந்த பொன் ராணி, அவரை வீட்டுக்குள் வர சொல்லி இருக்கிறார்.
மிளகாய் பொடி தூவி..
அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இருந்த நபர், பொன் ராணிக்கு வாழ்த்து தெரிவித்து பாடல் பாடி நடனம் ஆடியுள்ளார். பின்னர் தனது பையில் கையை விட்டு ஒரு சாக்லேட்டை எடுத்து பொன் ராணிக்கு அவர் கொடுத்தர். பின்னர் மற்றொரு பையில் அவர் கையை விட்டுள்ளார். சரி.. ஏதோ பரிசுப்பொருளை தான் எடுக்கிறார் என எதேச்சையாக பொன் ராணி பார்த்துக் கொண்டிருக்க, சட்டென மிளகாய் பொடியை எடுத்து அவர் முகத்தில் தூவினார்.
நகைப் பறிப்பு
இதில் கண்ணில் மிளகாய் பொடி பட்டதால் ஏற்பட்ட எரிச்சலில் அவர் கீழே விழுந்து துடித்துள்ளார். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இருந்தவர், பொன் ராணி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாக தாழிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இந்நிலையில், பொன் ராணியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து பொன் ராணியை மீட்டு அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர், பொன் ராணி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து தங்க நகையை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.