என்னவொரு துணிச்சல்! அப்பா, அம்மா கூட வேண்டாமாம்.. அஜித் தான் வேண்டுமாம்.. இவரல்லவோ "சிறந்த" வாரிசு!
சேலம்: தனக்கு அப்பா அம்மா கூட தேவையில்லை என்றும், நடிகர் அஜித் தான் வேண்டும் எனவும் சிறு குழந்தையை போல மருத்துவமனையில் இளைஞர் கதறி அழுத சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞர், 'துணிவு' படத்தின் முதல் காட்சியை பார்க்க முடியாத சோகத்தில் இவ்வாறு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.
24 வயதிலும் தினமும் தனக்கு சோறு போட்டு வரும் அப்பா அம்மாவை கூட வேண்டாம் என சொல்லும் அளவுக்கு திரைப்பட மோகம் இளைஞர்களை பாதித்துள்ளது என்பதைதான் இது காட்டுவதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறினர்.

பலியான 'துணிவு' ரசிகர்
நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ஒரே நாளில் திரையரங்குக்கு வந்திருப்பதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் தாண்டி, எந்த நடிகரின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதே இவர்களுக்கு இடையேயான போட்டியாக உள்ளது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் ரோகிணி திரையரங்கம் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19), அங்கு வந்த லாரி மீது ஏறி நடனம் ஆடினார். பின்னர் அங்கிருந்து அவர் கீழே குதித்ததில் அவரது முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் ரசிகர் செய்த 'சம்பவம்'
ஒரு நடிகருக்காக தலைகால் புரியாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தனது உயிரையே இழக்கும் நிலைக்கு அவர் ஆளாகி இருக்கிறார். நடிகரும் சாதாரணமான மனிதன் தான் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள தவறியதே இந்த உயிரிழப்புக்கு காரணம். அதுபோன்ற ஒரு ரசிகர் சேலத்தில் செய்த சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படம் வெளியாவதை ஒட்டி அங்கு அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கால் உடைந்ததால் ஐசியுவில் 'அட்மிட்'
இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை அடுத்த காட்டுப் பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (24) என்ற இளைஞர், உற்சாக மிகுதியில் திரையரங்கின் வெளிப்புற கேட் மீது ஏறியுள்ளார். அப்போது அங்கிருந்து தவறி கீழே விழுந்த அவருக்கு வலது கால் எலும்பு உடைந்தது. கால் உடைந்ததால் தரையில் படுத்து தத்தளித்துக் கொண்டிருந்த பிரதீப்பை அவரது நண்பர்கள் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

"அப்பா அம்மா வேண்டாம்"..
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் பிரதீப் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். தன்னை இப்பொழுதே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறும், துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியை தான் பார்த்தே ஆக வேண்டும் என அவர் கூச்சலிட்டார். "அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க" என்றும், "அஜித் தான் எனது உயிர்" எனவும் அவர் பிரதீப் கத்திக் கொண்டிருந்ததால் மற்ற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், "ஏன் தம்பி.. உனக்கு அப்பா அம்மா முக்கியமா அஜித்குமார் முக்கியமா எனக் கேட்டதற்கு, தனக்கு அப்பா அம்மா வேண்டாம் என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தான் வேண்டும் எனவும் மிட்டாய்க்கு அடம்பிடிக்கும் குழந்தையை போல பிரதீப் அடம்பிடித்தார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications