வீரபாண்டி ராஜா மாரடைப்பால் மரணம் - பிறந்தநாளில் உயிரிழந்த சோகம் - மு.க ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான வீரபாண்டி ராஜா இன்று மாரடைப்பால் காலமானானார்.
சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 59. வீரபாண்டி ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வீரபாண்டி ராஜாவின் மறைவுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட திமுக முன்னோடிகளில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். கட்சியில் முக்கிய மாநிலப்பொறுப்பிலும், அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்தவர். சேலத்து சிங்கம் என்றும், வீரபாண்டியார் என்றும் திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் வீரபாண்டி ஆறுமுகம்.
Recommended Video
முன்னாள் முதல்வர் கருணாநிதியே அதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக இருந்த அவரது மூத்த மகன் செழியன் திடீரென இறந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகனான வீரபாண்டி ராஜா களமிறங்கினார்.
தனக்கு எம்எல்ஏ ஆகும் ஆசை இருப்பதாகவும், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு வீரபாண்டி ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்திடம் நச்சரிக்க, அவரும் அந்த விவகாரத்தை அன்றைய திமுக தலைவர் கருணாநிதியிடம் கொண்டு சென்றார். சரி பார்க்கலாம் என அப்போது கருணாநிதி கூறியதாகவும், அப்போ.. ஸ்டாலினுக்கு சீட் கொடுக்க மாட்டீங்களா... தலைவரே... என வீரபாண்டி ஆறுமுகம் பேசி, தன் மகனுக்கு சீட் வாங்கி வந்ததாக பரவலான பேச்சு உண்டு.
வீரபாண்டி ஆறுமுகம் இருந்த வரை ஸ்டாலினுடன் அவர் ஒத்துப்போகவில்லை. வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின், சேலம் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு ஸ்டாலின் ஆதரவு கிடைத்ததால், ராஜாவுக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால் தொடர் தோல்விகளை சேலம் மாவட்டத்தில் திமுக சந்தித்தது. இதனால் வீரபாண்டி ராஜா மீது ஸ்டாலின் உச்சகட்ட அதிருப்தியில் இருந்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டு, தேர்தல் பணிக்குழுத் தலைவராக பணியாற்றி வந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். அவர் பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் பரவலாக தகவல் பரவியது. ஆனாலும் அவர் திமுகவில் தொடர்ந்தார்.
இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது வீட்டில் தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மாடி ஏறிய போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். வீரபாண்டி ராஜாவின் மறைவு திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி ராஜாவின் மறைவுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications