விடுதலையாகிறாரா சசிகலா.. என்ன செய்யப் போகிறது பாஜக?
-ஆர்.மணி
சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியும், உற்ற தோழியுமான சசிகலா அநேகமாக வரும் ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து விடுவார் என்றே தெரிகிறது.
ஜெயலலிதா 1991 – 1996 ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் தன்னுடைய வருமானத்த்துக்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய்கு சொத்து சேர்த்ததாக 1996 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அன்றைய திமுக அரசு வழக்கு போட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி (சசிகலா வின் உறவினர்) மற்றும் வி.என். சுதாகரன் (ஜெ வின் கைவிடப்பட்ட வளர்ப்பு மகன்) ஆகியோர் மீது வழக்குகள் போடப்பட்டது. 18 ஆண்டுகள் கழித்து 2014 செப்டம்பரில் பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் இந்த நால்வரும் குற்றவாளிகள் என்று சொல்லி அனைவருக்கும் தலா 4 ஆண்டுகள் தண்டனையும், ஜெ வுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
பின்னர் கர்நாடக உயர்நீதி மன்றம் அனைவரையும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து 2015 மே மாதம் விடுதலை செய்தது. 2016 டிசம்பரில் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து போனார். பின்னர் 2017 ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதி மன்றம் சசிகலா மற்றும் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தது. அதன்படி மூவரும் பெங்களூரு பரப்பனஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர்.
இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
2021ல் விடுதலையாக வேண்டும்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வரும் 2021 ம் ஆண்டு பிப்ரவரியில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டும். சிறை விதிகளின்படி தண்டனை பெற்ற ஒரு குற்றவாளிக்கு மாதத்திற்கு எட்டு நாட்கள் விடுமுறை உண்டு. (இது கடுங் குற்றவாளிகளுக்கு கிடையாது. சாதாரண
தண்டனை பெற்றவர்களுக்கு மட்டும்தான். இந்த வழக்கில் நால்வருக்கும் சாதாரண தண்டனை தான் கொடுக்கப்பட்டது). அதன்படி கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் 210 நாட்கள் மூவருக்கும் விடுமுறை கிடைத்திருக்கிறது.
210 நாட்களை கழிக்கணும்
இதனை நான்காண்டு கால தண்டனையிலிருந்து கழித்து பார்த்தாலே கிட்டத்தட்ட வரும் ஆகஸ்ட் மாதத்தில் சசிகலா வும் மற்றவர்களும் விடுதலை ஆகிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப் படுகிறது. "எனக்குத் தெரிந்து வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் சசிகலா வும் மற்றவர்களும் விடுதலையாகி விடுவார்கள். இதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். நன்னடத்தை அடிப்படையிலும் சசிகலா விடுதலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. சசிகலா மீது எந்த குற்றச்சாட்டும் அவரது சிறைத் தண்டனை காலத்தில் இல்லை. ஆகவே ஆகஸ்ட்டுக்கு பிறகும் சசிகலா விடுதலையில் கால தாமதம் ஏற்படாது என்றே நினைக்கிறேன்"என்று கூறுகிறார் சிறை விதிகளை நன்கறிந்த, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.
10 கோடி அபராதம் இருக்கு
"அபராத தொகையான 10 கோடி ரூபாயை கட்ட வேண்டும். அதில் அந்த 10 கோடிக்கான முறையான கணக்கு காட்டப் பட வேண்டும். அதனையும் சசிகலா வுமம் மற்றவர்களும் செய்யப் போகிறார்கள் என்றே கேள்விப் படுகிறேன்" என்று மேலும் கூறுகிறார் அந்த வழக்கறிஞர். இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது சட்டத்தின் பார்வை அல்ல... மாறாக அரசியல் பார்வைதான் ... அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கின்றது. தேர்தலுக்கு எட்டு மாத காலத்துக்கு முன்பு சசிகலா வின் விடுதலையை பாஜக எப்படி பார்க்கும் என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
என்ன நடக்கும்
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அரசு அநேகமாக எல்லா விஷயங்களிலும் மோடி அரசுக்கு ‘ஆமாஞ் சாமி' போடும் அரசாகவே இருந்து கொண்டிருக்கிறது. சசிகலா வெளியே வந்தால் இது தொடருமா என்பதுதான கேள்வி. இன்றைக்கும் சசிகலா வின் ஆதரவாளர்கள் அஇஅதிமுக வுக்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயம் ச சிகலா விடுதலையான பின்னர் அவர்கள் சசிகலா பக்கம் வரத்தான் போகிறார்கள். இதில் மில்லியன் டாலர் கேள்வி சசிகலா என்ன செய்யப் போகிறார் என்பதுதான். ஆம். தற்பொழுது பாஜக வுடன் அஇஅதிமுக அணுக்கமாக இருப்பது போல சசிகலா வும் இருப்பாரா? அவர் அரசியலுக்கு வருவாரா? வந்தாலும் அதற்கு அஇஅதிமுக வுக்கு உள்ளேயும், வெளியேயும் என்ன மாதிரியான ஆதரவும், எதிர்ப்பும் இருக்கும்? என்பவைதான் முக்கியமான கேள்விகள்.
சசிகலா என்ன செய்வார்
இது குறித்து இந்த கட்டுரையாளரிடம் பேசிய மூத்த அஇஅதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஒருவர் இப்படி சொன்னார்: "சசிகலா வின் அரசியல் அபிலாஷகளை எந்தளவுக்கு பாஜக அனுமதிக்கப் போகிறது என்பதுதான் நாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. ஜெயலலிதா பாஜகவை மூர்த்தண்யமாக பல விஷயங்களில் எதிர்த்து நின்றது போல ஒரு போதும் சசிகலா பாஜக வுக்கு எதிராக அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க மாட்டார். சசிகலாவால் அது முடியவும் முடியாது". மற்றோர் விஷயத்தையும் அந்த அஇஅதிமுக நிர்வாகி கூறினார்; "சசிகலா மீது மூன்று அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் 1996 முதல் சென்னையில் உள்ள எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் அமலாக்கத் துறைதான் இந்த வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் அந்த வழக்குகளை மோடி அரசு தூசி தட்டி எடுக்கும். இதனையும் கவனத்தில் கொண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் சசிகலாவின் அரசியல் என்ன மாதிரியானதாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்".
எடப்பாடியார் வியூகம் எப்படி இருக்கும்
ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து விடும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை தவிடு பொடியாக்கி கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு காலத்தை எடப்பாடி ஓட்டி விட்டார். மீதமிருக்கும் எட்டு மாத காலத்தையும் எடப்பாடி இப்படியே ஓட்டி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் சசிகலா விடுதலையானால் தற்போதுள்ள அரசியல் களம் எப்படி பாதிக்கப்படும் என்பதை இப்போதைக்கு கணிப்பது கடினம்தான்.
Recommended Video
இப்போது நிலைமை தலைகீழ்
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது - அஇஅதிமுக பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் - சசிகலா வை பார்க்காமல் ஜெயலலிதாவை நேரடியாக எத்தனை அஇஅதிமுக நிருவாகிகள் பார்த்தார்கள் என்றால் பதில் கிட்டத்தட்ட பூஜ்யம் என்றுதான் வரும். ஆனால் ஜெ மறைவுக்குப் பிறகு நிலைமை தலை கீழாக மாறி போனது. சசிகலா வால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பிறகு எப்படி மாறிப்போனார் என்பது வேறு கதை.
எது எப்படியோ, சசிகலா விடுதலை யான பின்னர் அவரது அரசியலை தீர்மானிக்கப் போவது அஇஅதிமுக வோ, ஏன் சசிகலாவோ கூட அல்ல ...அது நிச்சயம் பாஜக தான். மோடிதான். இது நமக்குத் தெரியவில்லை என்றால், நமக்கு தற்போதய பாஜக வையும், மோடியையும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.