நடுக்கடலில் திடீரென மூழ்கிய 317 ஈழத் தமிழர்கள் பயணித்த கப்பல்- காப்பாற்றிய சிங்கப்பூர் கடற்படை!
சிங்கப்பூர்: 317 இலங்கை தமிழர்கள் அகதிகளாக பயணித்த கப்பல் நடுக்கடலில் திடீரென மூழ்கிய நிலையில் சிங்கப்பூர் கடற்படை விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டது.
2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க செய்துவிட்டு போராட்டத்தை நிறுத்திவிட்டனர். ஆனாலும் இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தொடர்ந்து வெளியேறுகின்றனர். பல்வேறு நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் நாடுகின்றனர். தமிழ்நாட்டுக்கு இன்னமும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர்.
2010-ம் ஆண்டு இலங்கையில் இருந்து 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக கனடா சென்றனர். இது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 400 ஈழத் தமிழர்கல் அகதிகளாக ஒரே நேரத்தில் கனடாவுக்கு சென்றனர். அதன்பின்னர் நேற்று 317 ஈழத் தமிழர்கள் கனடா செல்வதற்காக கப்பலில் பயணித்தனர்; அக்கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே நடுக்கடலில் மூழ்குகிறது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது.
குவிக்கப்படும் சீன ராணுவம்! இலங்கை எல்லையில் என்ன நடக்கிறது? நிலைமையை விளக்கிய டக்ளஸ் தேவானந்தா
மீட்டது சிங்கப்பூர் கடற்படை
இதனைத் தொடர்ந்து வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் நாடுகள் 317 ஈழத் தமிழர்கள் பயணித்த கப்பலை தேடத் தொடங்கினர். பின்னர் சிங்கப்பூர் கடற்படையின் விடாத முயற்சியால் 317 ஈழத் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தற்போது மீட்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு
சிங்கப்பூர் கடற்படையின் முயற்சியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு: கனடாவில் தஞ்சம் அடைய 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசின் இந்த உதவி பாராட்டத்தக்கது.முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது.
ஐநா உதவ வேண்டும்
அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்;இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்! கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்!. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
வைகோ எம்.பி.
முன்னதாக தமிழக அரசியல் தலைவர்கள் இந்த கப்பலை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டிருந்த அறிக்கையில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள் என தெரிவித்திருந்தார்.