பேனரில் மோடி படம் எங்கே? கொரோனா தடுப்பூசி முகாமில் ரகளை செய்த பாஜகவினர் மீது போலீசில் புகார்
சிவகங்கை: சிவகங்கை அருகே தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என்பதற்காக ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பகுதியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கான பேனரில் தமிழக அரசின் இலச்சினையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது படங்களும் இடம்பெற்றிருந்தன.
தடுப்பூசி போட்டால்.. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசு.. எந்த ஊரில் தெரியுமா..?
|
வைரல் வீடியோ
அப்போது அங்கு வந்த சிலர், தடுப்பூசி முகாம் பணியில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பேனரையும் அவர்களாகவே கழற்றியதுடன் இனிமேல் பாரதப் பிரதமர் மோடி படம் போட்டாக வேண்டும் என எச்சரித்துவிட்டு நகர்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. மேலும் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் இந்த வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் கடந்து செல்லவா? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.
மாஜி எம்.எல்.ஏ. புகார்
இந்நிலையில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், இளையான்குடி போலீசில் ஒரு புகார்கொடுத்துள்ளார். சுப.மதியரசன் தமது புகாரில் கூறி இருப்பதாவது: இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளராகவும் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி இருக்கிறேன். டிசம்பர் 4-ந் தேதியன்று சாலைக்கிராமம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
பாஜகவினர் ரகளை
அப்போது சாலைக்கிராமம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தன், செல்லக்குடி உள்ளிட்டோர் தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். மேலும், அங்கு கட்டப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் படம் எங்கே என கேள்வி எழுப்பினர். அத்துடன் தடுப்பூசி போட வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய கோவிந்தன், செல்லக்குடி ஆகியோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுப.மதியரசன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ மற்றும் இந்த புகாரின் அடிப்படையில் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.