10 வருசத்துல “செய்ய வேண்டியத” திமுக ஒரே வருசத்துல செஞ்சுருச்சு.. ரொம்ப உண்மை - சீமான் காட்டம்!
சிவகங்கை: 10 ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், 10 ஆண்டுகளில் செய்யவேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்திருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
இந்நிலையில், பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டிய சொத்துக்களை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது தி.மு.க என சீமான் சாடியுள்ளார்.
பசுமடம், மாட்டிறைச்சி, பல்லக்கு: உ.பி. பிற்போக்குத்தனத்தை இறக்குமதி செய்வதா திராவிட மாடல்? சீமான்
ஒரு நல்லதும் செய்ய முடியாது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தனது சொந்த ஊரான அரணையூரில் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது. ஆள் மாறினால் மட்டும் சிக்கல் தீர்ந்துவிடாது.
முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கியூ பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்க வேண்டும். இவை இரண்டையும் கலைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நல்லதும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.
இலங்கைக்கு ஏற்பட்ட நிலை
கடந்த காலத்தைப் போலவே சினிமாத்துறை மீண்டும் தி.மு.க கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. இப்போது விக்ரம் படத்தை உதயநிதி வெளியிடுகிறார். அதிகாரம் முழுக்க அவர்களிடம் இருக்கிறது. திரையரங்குகளும் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் சட்டம்.
இலங்கையிலும் அப்பா மகனுக்கு மாலை போடுவது, மகன் அப்பாவுக்கு மாலை போடுவது எல்லாம் நடந்தது. இருவரும் சைக்கிளில் சென்ற காட்சிகளைப் பார்த்தோம். இங்கும் இதெல்லாம் நடக்கிறது. இலங்கைக்கு ஏற்பட்ட நிலைமை இங்கும் நடக்கும்.
“செஞ்சு முடிச்சிட்டாங்க”
மேலும், பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை கடந்த ஓர் ஆண்டில் செய்துள்ளோம் என தி.மு.க கூறுகிறது. ஆம்.. பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்றாலும் சேர்க்க முடியாத சொத்துக்களை வளங்களை கொள்ளையடித்து ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டுகளில் சேர்க்க வேண்டியதை மிச்சமிருக்கும் நான்கு ஆண்டுகால ஆட்சியில் சேர்த்துவிடுவார்கள் என சீமான் தெரிவித்தார்.
ஏமாற்று வேலை
தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியின் மொழிக் கொள்கை தொடர்பான பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை. மும்மொழி கொள்கை என்பது மோசடி வேலை. பா.ஜ.க அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை பேசுகிறது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.கவை குற்றம்சாட்டுகிறது. இப்படி மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். நாடக ஆசிரியரின் பிள்ளைகள் நாடகம் தானே போடுவார்கள் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.