சிவகங்கை கோயில் நில ஆக்கிரமிப்பு புகார்.. வழக்கை சந்திக்க தயார்...முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி
சிவகங்ககை: சிவகங்கையில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கோயில் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட இடத்தை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகர் தெப்பக்குளம் அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான 142 ஏக்கர் நிலம் உள்ளது.
சிவகங்கை - மேலூர் சுற்று சாலை சந்திப்பில் உள்ள இந்த இடத்தில் 11 ஏக்கர் இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமானவர்கள் அபகரித்துள்ளதாக புகார் எழுந்தது.

கோயில் நிலம் மீட்பு
இது தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்க்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

அரசியல் காழ்புணர்ச்சி
கோயில் நில அபகரிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், என் மீது களங்கம் ஏற்படுத்த ஆளும் கட்சியினரால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்ட புகார் என்று மறுத்தார். பிரச்சினைக்குரிய இடத்திற்கும் எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ சம்பந்தம் இல்லை என்றும் திட்ட வட்டமாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு தொடுத்தால் வழக்கை சந்திக்க தயார் என்றும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

பாண்டி மீது புகார்
முன்னதாக நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமான பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டினார் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர்.

பாஸ்கரன் மறுப்பு
கோயில் நிலத்தை அபகரித்தவர் மாஜி அமைச்சர் பாஸ்கரனுக்கு நெருக்கமானவர் என்று தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்திகள் வெளியானதை அடுத்து , தனக்கு எதிராக ஆளும் கட்சியினர் செய்த சதி என்று மறுத்துள்ளார். வழக்கை சந்திக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications