காங்கிரசில் கோஷ்டி பூசல்.. கேள்வி எழுப்பிய நிருபர்.. யாரும் எதிர்பாராத பதிலளித்த கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: அரசியல் கட்சி என்றாலே கோஷ்டி பூசல் இருப்பது வழக்கம்தான். ஆனால் காங்கிரசையும், கோஷ்டி பூசலையும் பிரிக்க முயாது. தமிழகமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆளக்கூடிய மாநிலமாக இருந்தாலும் சரி கோஷ்டி பூசல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் தேவக்கோட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடத்த உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோஷ்டி மோதல்
அப்போது கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே கடும் மோதல் ஏற்பட்டது. நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் வந்து அமைதியை ஏற்படுத்தினார்கள். புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் தேவக்கோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கோஷ்டி மோதல் குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினார்கள்.

கார்த்தி சிதம்பரம் பதில்
இதற்கு பதில் அளித்த அவர், 'இது ஒரு பெரிய சம்பவம் அல்ல. கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். கருத்து வேறுபாடுகள் இல்லாவிட்டால் அது அரசியல் கட்சி அல்ல. சிந்தனை இல்லாத அரசியல் கட்சி, சுதந்திரம் இல்லாத அரசியல் கட்சியில்தான் கோஷ்டி பூசல் இருக்காது. காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. இந்தியாவிலேயே உள்ள பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் தற்போது வந்து கொண்டுள்ளது.அதிரடியான மாற்றத்தை பஞ்சாபில் கொண்டு வந்துள்ளோம்' என்று கூறினார்.

உபயோகமான பேச்சு இல்லை
தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ' நமது வரிப்பணம் நமக்கு செலவு செய்யாமல் வடநாட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது. இந்திய பிரதமர் ஐ.நா சபையில் உரையாற்றுவது என்பது புதிதல்ல. பிரதமர் நேற்று ஐ.நா சபையில் உரையாற்றிய அதில் எந்தவிதமான விஷயமும் இல்லை அடுக்கு மொழியில் தான் பேசினாரே தவிர உபயோகமான பேச்சு இல்லை.

தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்
2024 தேர்தலிலும் தி.மு.க கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க இங்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் தெளிவாக உள்ளனர். தி.மு.க அரசை பொறுத்தவரை பொதுமக்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி ஆட்சி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications