சிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்!
சிவகங்கை: சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல் கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், பாஜக மீனவர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான முத்துப்பாண்டி (45). சிவகங்கை மதுரை முக்கு நெல்மண்டி தெருவில் வசித்து வந்தார்.
இவர் நேற்று முன் தினம் வீட்டின் அருகே டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது முத்துப்பாண்டியை இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

சிவகங்கை டவுன் போலீஸ் வழக்கு
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் எஸ் பி செந்தில்குமார் 3 தனிப்படைகள் அமைத்து கொலை செய்த கும்பலை தேடி வந்தனர். விசாரணையில் சிவகங்கை அருகே வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (29). இவர் கல்லுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சிவகங்கை ஒன்றிய செயலாளர் பொன்னுசாமியை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.

அதிமுக பிரமுகர் கொலை
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக பைக்கில் செல்வம் வந்து கொண்டிருந்த போது சாமியார்பட்டி அருகே அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் முத்துப்பாண்டி குற்றவாளியாக இருந்தார். இந்த நிலையில் செல்வம் கொலைக்கு முத்துபாண்டியை செல்வத்தின் உறவினர்கள் வெட்டி கொன்றது தெரியவந்தது.

பழிக்கு பழி
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய வைரவன்பட்டியைச் சேர்ந்த சுகுமார் (27), பால்பாண்டி (22), செல்வேந்திரன் (40) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அண்மைகாலமாக பழிக்கு பழியாக கொலை செய்யும் போக்கு தென் மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றன.

நீதிமன்றங்கள்
கொலைக்கு கொலை தீர்வாகாது என நீதிமன்றங்களும் காவல்துறையும் அறிவுறுத்தி வந்தாலும் பழிவாங்கும் போக்கை சிலர் கைவிடுவதாக தெரியவில்லை. சட்டம் இருக்கிறது, நீதிமன்றங்கள் இருக்கின்றன, காவல் துறை இருக்கும் நிலையில் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை, அந்த கொலைக்கு வேறு கொலை என சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுக்கத் தொடங்கினால் நாடு என்னவாகும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த சம்பவங்களை போலீஸார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.












Click it and Unblock the Notifications