T20 WC: பாகிஸ்தானுக்கு அடிச்ச லக்.. அரையிறுதி சுற்றுக்கு செல்ல என்ன வழி? விவரம்
மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் கடைசி ஓவர் வெற்றி, பாகிஸ்தானின் அரையிறுதி கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தாலும், அதை நனவாக்க கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணி சனிக்கிழமை இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. நியூசிலாந்தின் நிகர ரன் ரேட்டை முந்திக்கொள்ளும் அளவுக்கு, இந்த போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக்கு முக்கியம்.

இங்கிலாந்தின் வெற்றிக்குப் பிறகு, நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் +1.39 ஆகக் குறைந்தது. இது பாகிஸ்தானின் தற்போதுள்ள -0.46 என்ற நிகர ரன் ரேட்டை விட சிறந்தது. அரையிறுதிக்கு முன்னேற, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால், இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இலக்கை சேஸ் செய்தால், 13.1 ஓவர்களில் வெற்றியை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, முதலில் 200 ரன்கள் எடுத்தால், இலங்கையை 136 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இரண்டாவதாக பேட் செய்தால், இலங்கை நிர்ணயிக்கும் எந்த இலக்கையும் 79 பந்துகளில் எட்ட வேண்டும்.
இந்த இலக்குகளில் எதையாவது பாகிஸ்தான் அடையத் தவறினால், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். சூப்பர் 8 சுற்றில் மூன்று வெற்றிகளுடன் இங்கிலாந்து ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துவிட்டது.
அரையிறுதியில் இருந்து வெளியேறிய காரணத்தால், இலங்கைக்கு இந்த போட்டியில் பெரிய ஆதாயம் இல்லை. தொடரில் மூன்று தொடர் வெற்றிகளுடன் சிறப்பாகத் தொடங்கிய இலங்கை, சூப்பர் 8 சுற்றில் இரண்டு தோல்விகளைச் சந்தித்தது.
இலங்கையின் முக்கிய பந்துவீச்சாளர்களான வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆட மாட்டார்கள். பதும் நிஸ்ஸங்கா தவிர, அவர்களின் எந்த பேட்ஸ்மேனும் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை என்பதும் பாகிஸ்தானுக்கு சாதகமாகும்.
ஆனால், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பில்லை. ஒரு வேலை பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் இறுதிப் போட்டி அல்லது அரையிறுதிப் போட்டியில் மோதிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
சனிக்கிழமை பாகிஸ்தான் குரூப் 2 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேயிடம் தோற்று, இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 1 இல் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும். அப்படி நடந்தால், கொழும்பில் நடைபெறும் ஒரு அரையிறுதியில் இவ்விரு அணிகளும் சந்திக்கும்.












Click it and Unblock the Notifications