மகிந்த ராஜபக்சே இலங்கையை விட்டு ஓட்டம்? திருகோணமலையில் இருந்து கடற்படை கப்பல் மூலம் தப்பினார்?
திருகோணமலை: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டில் இருந்து கடற்படை கப்பல் மூலமாக வெளிநாடு ஒன்றுக்கு தப்பி ஓடிவிட்டதாக சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கி இருந்த நிலையில் திடீரென மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர் மகிந்த ராஜபக்சே. இது ஒட்டுமொத்த தென்னிலங்கையையும் கொந்தளிக்க வைத்தது. தென்னிலங்கையில் சிங்களர் பிரதேசம் முழுவதும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டது.
மகிந்த ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இந்த நிலையில் கொழும்பு அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலமாக தப்பி திருகோணமலை கடற்படை முகாமுக்கு வந்தார்.
இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால் பொதுமக்கள், திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர் கடலுக்குள் மீன்பிடி படகுகள் மூலமாகவும் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, கடற்படை கப்பல் ஒன்றின் மூலமாக தமது குடும்பத்தினருடன் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மகிந்த ராஜபக்சே இலங்கையைவிட்டு எந்த நாட்டுக்கு தப்பி சென்றார் என்கிற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, தமது தந்தை நாட்டை விட்டு ஒருபோதும் தப்பி ஓடமாட்டார் என அவரது மகன் நாமல் ராஜபக்சே கூறியிருந்தார். இது தொடர்பாக இலங்கை பத்திரிகையாளர்களிடம் நாம் பேசிய போது, இதுவரை வெளிவந்த செய்திகள் தொடக்கத்தில் யூகமாக தோன்றினாலும் அவையே உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன. தற்போதைய நிலையில் எதனையும் நாம் உடனே உறுதி செய்யவோ மறுக்கவோ இயலாத நிலைதான் உள்ளது என்கின்றனர்.