கொழும்பில் சீனா போர்க் கப்பல்களுக்கு போட்டியாக இந்திய கடற்படை கப்பல்கள்!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ள நிலையில் போட்டியாக இந்தியாவின் கடற்படை பயிற்சி கப்பல்களும் சென்றிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் கூட்டு பயிற்சிக்காக வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 2 கடற்பயண பயிற்சி பாய்க் கப்பல்களான தராங்கிணி, சுதர்ஷினி ஆகியவை கொழும்புக்கு நேற்று சென்றுள்ளன.
இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கையின் கடற்படையினர் சம்பிரதாய வரவேற்பு அளித்தனர். இந்தியக் கப்பல்களிலும் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
கொழும்பு துறைமுகத்துக்கு சீனாவின் போர்க்கப்பல்கள் அடிக்கடி வருகை தருகின்றன. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த எதிர்ப்பின் ஒருபகுதியாக சீனாவின் போர்க்கப்பல்கள் கொழும்புக்கு வந்த அதே நேரத்தில் இந்தியாவின் பயிற்சி கப்பல்களும் முகாமிட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுகிறது.