ராணுவத்தின் பிடியில் உயிருடன்... இசைப்பிரியா சிதைத்துக் கொல்லப்பட்ட போட்டோ ஆதாரம் வெளியானது
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவத்தின் பிடியில் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடியோ ஆதாரம்...
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
மறுப்பு...
ஆயினும் வழக்கம் போல, இத்தகவலை மறுத்த இலங்கை ராணுவம் போலி ஆதாரங்கள் மூலம் உண்மையை மறைக்க பார்த்தது.
புகைப்பட ஆதாரம்...
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவுநாள்...
இறுதிப்போர் நடந்ததன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.