புலிகளுடனான வவுனியா ஒப்பந்தம் ஏற்பட காரணமான ரணில் விக்ரமசிங்கே கடந்து வந்த பாதை!
கொழும்பு: இலங்கை அரசியலில் தற்போது தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கடந்து வந்த பாதை குறித்த ஒரு பார்வை:
1949 ஆண்டு மார்ச் 24ம் தேதி பிறந்த ரணில் விக்ரமசிங்கே, ஆரம்பத்தில் வழக்கறிஞராகும். 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தனது 28வது வயதில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பியக்மா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெயவர்தனே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தபோது அதில், வெளியுறவுத்துறை துணை அமைச்சராக ரணில் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ரணசிங்கே பிரேமதாசா அதிபராக இருந்தபோது, தொழில்துறை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, பியகமவில் சிறப்பு வர்த்தக மண்டலத்தை அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தினார். கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, ஆங்கிலம், தொழில்நுட்பம், கணினி போன்றவற்றை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், இலங்கையின் சிறந்த கல்வித்துறை அமைச்சர் என்ற பெயரை இன்றுவரை தக்க வைத்துள்ளார்.
1993ம் ஆண்டு அதிபர் ரணசிங்கே பிரேமதாசா கொல்லப்பட்டார். அப்போது, பிரதமராக இருந்த விஜயதுங்கே, தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். அவைத்தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சி சார்பில் சந்திரிகா குமாரதுங்கே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, பொருளாதாரத்தை மறு கட்டமைத்தல், மின்திட்டங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றினார்.
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கிய பங்காற்றியவர் ரணில் விக்ரமசிங்கே என்றால் அதுமிகையில்லை.
2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக, சந்திரிகா குமாரதுங்கே நிறுத்தினார். இத்தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து போட்டியிட்ட ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலின் போது, ராஜபக்சேவுக்கு எதிராக, அவர் சார்ந்த கட்சியின் தலைவரான மைத்ரிபால் சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோருடன் ரணில் விக்ரமசிங்கே கைகோர்த்தார்.
இந்த தேர்தலில், அதிபராக மைத்ரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டதும். பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.