புர்காவை அடுத்து இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சிக்கும் தடை
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பை அடுத்து இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவிற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இப்போது இஸ்லாமிய தொலைக்காட்சியான பீஸ் டிவிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இலங்கை அரசு தீவிரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிரவாதிகள் புர்கா அணிந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து வருகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் இலங்கையில் இஸ்லாமிய பெண்களும் முகத்தை மூடும் எந்த வித ஆடைகளும் அணியக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஆதரிக்கும் டிவி- க்களையும் தடை செய்ய அரசு உத்தேசித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் பொறுப்பேற்று இருந்தாலும் அவர்கள் இலங்கையில் உள்ள அடிப்படைவாதிகளின் உதவி இல்லாமல் இதை செய்திருக்க முடியாது என்று இலங்கை அரசு நம்புகிறது. ஆகவே இலங்கையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இலங்கை அரசு செக் வைக்க முடிவு செய்துள்ளது.
இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது
இதனையடுத்து துபாயில் இருந்து ஒளிபரப்பாகும் பீஸ் டிவியை இலங்கையில் ஒளிபரப்ப கூடாது என்று டயலாக் மற்றும் எஸ்.எல்.டி என்ற இரு கேபிள் டிவி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் இலங்கையில் பீஸ் டிவியின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவி பிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கின் டிவி. ஜாஹிர் நாயக்கின் மதப் பிரசாரங்களுக்கு இந்தியா, பங்களா தேஷ் ஆகிய நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இப்போது இலங்கை அவரது தொலைக்காட்சிக்கு தடை விதித்துள்ளது.
பின்னணி
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியாவிலும் தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சென்றோரில் சந்தேகத்திற்கு இடமானோர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவில் ரியாஸ் அபுபக்கர் என்பவரை என்.ஐ.ஏ.கைது செய்தது.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஜாஹிர் நாயக்கின் வீடியோக்கள், இலங்கை குண்டுவெடிப்பின் காரண கர்த்தாவாக கருதப்படும் ஜஹ்ரன் ஹாஷிமின் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்தே இலங்கையில் ஜாஹிர் நாயக்கின் சேனல் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது