தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தர மறுக்கும் சிங்கள கட்சிகள்!
கொழும்பு: இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசு அமைக்கிற போது 3வது பெரிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை சிங்கள கட்சிகள் தர மறுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை. இதனால் மைத்ரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சி ஆதரவளித்தது.
எதிர்க்கட்சியாக த.தே.கூ
ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி இரண்டும் இணைந்து தேசிய அரசு அமைக்கவும் முடிவு செய்துள்ளன. இதனால் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 16 எம்.பி.க்களுடன் 3வது இடத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது.
அடம் பிடிக்கும் சிங்கள கட்சிகள்
ஆனால் சிங்களர் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாக இருக்கின்றன. மைத்ரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியிலும் பங்கு வகித்துக் கொண்டு தங்களுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வேண்டுமென்று கோரி வருகிறது.
சொத்தை வாதம்
அதாவது அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பது சுதந்திரக் கட்சிதானே தவிர அந்தக் கட்சியை உள்ளடக்கிய கூட்டமைப்பு அல்ல என்கிற வியாக்யானத்தை முன்வைக்கிறார்கள். இந்த சொத்தை வாதத்தை முன்வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
நாடாளுமன்ற குழு தலைவர் பதவி
இது சர்வதேச அளவில் பிரச்சனையாக வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களை நியமிப்பது என்கிற முடிவில் இருக்கிறராம் ரணில். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக தமிழர் பிரதிநிதிகள் அமர்ந்துவிட்டால் தமிழர் பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்து சர்வதேச அரங்கில் தொடர்ந்து எதிரொலித்துவிடும் என்ற அச்சத்தில்தான் இரண்டு சிங்கள கட்சிகளும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.