இலங்கை: அரசுக்கு எதிரான கொழும்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர களமிறங்கும் ராணுவம்?
கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ராணும் களமிறக்கப்படலாம் என்கின்றன கொழும்பு தகவல்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இயலாத அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொழும்பு காலிமுகத் திடலில் ஒரு மாதத்துக்கும் மேலாக தன்னெழுச்சிப் போராட்டத்தை இரவும் பகலுமாக பொதுமக்கள் நடத்துகின்றனர்.
இந்த போராட்டங்களைத் தொடர்ந்து இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனால் பதவி விலகும் முன்பாக கொழும்பு காலிமுகத் திடல் போராட்டக்காரர்களை குண்டர்கள் மூலம் தாக்கினார் மகிந்த ராஜபக்சே.
இதனால் ஒட்டுமொத்த இலங்கையுமே கொந்தளிப்புக்குள்ளானது. கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்களின் 100க்கும் மேற்பட்ட வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள், உல்லாச விடுதிகள் அத்தனையும் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுட முப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கொழும்பு நகரில் ராணுவத்தினர் டாங்குகளுடன் அணிவகுப்பு நடத்துகின்றனர். அத்துடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.
இதனால் எந்த நிமிடத்திலும் கொழும்பு காலிமுகத் திடலில் குவிந்து போராடி வரும் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் ஏவிவிடப்படக் கூடும் என்ற அச்சமும் பதற்றமும் நிலவுகிறது.
நாசக்கார முயற்சிகளை புறம்தள்ளுங்க! ஒன்றிணையலாம் வாங்க! இலங்கை மக்களுக்கு கோத்தபய வேண்டுகோள்